5 முனை போட்டியில் வென்று விருதுநகரில் வாகை சூடுவாரா வைகோ?
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார். விருதுநகரில் வைகோதான் வேட்பாளர் என்பது இன்று நேற்றல்ல கடந்த 2 ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நடைபயணம், மாநாடு என்று தொகுதி மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
வையாபுரி கோபால்சாமி என்ற வைகோவிற்கு 65 வயதாகிறது. இவரது தந்தை வையாபுரி, தாயார் மாரியம்மாள், நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமத்தில் பிறந்த வைகோ எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.
மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர், இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், துரை வையாபுரி என்ற மகனும், ராஜலெட்சுமி, கண்ணகி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
25ம் வயதிலேயே (1970) கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர், பிறகு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர். _ திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கித் தலைவர். தி.மு.க. மாநில, மாணவரணித் துணைச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
இளமையில் சிறைவாசம்
1976 ஜனவரி 31 முதல் 77 பிப்ரவரி வரை எமர்ஜென்சி காலத்தில் பாளையங்கோட்டை, சேலம் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.
திமுகவில் வைகோ
தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியை உருவாக்கினார், 1978 - முதன் முதலில் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் தொடர்ந்து 1990 வரை 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
மதிமுக தொடக்கம்
1994 - முதல் ம.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்து வரும் வைகோ
1998 - பிப்ரவரி - சிவகாசி தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றார். 1999 - அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சிவகாசி தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றார்.
‘வைகோ’ ஆனார்!
‘வை.கோபால்சாமி என்ற பெயர் இனிமேல் ‘வைகோ' (Vaiko) என்றுதான் அழைக்கப்படும்' என்று 1998 ஜனவரி 14ம் தேதி இந்திய அரசிதழில் செய்தி வெளியானது. தன் பெயரை ‘வைகோ' என்று மாற்றும்படி வைகோ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார்.
முதல்முறையாக தோல்வி
விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்டப்பின்னர், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வைகோ காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார்.
மீண்டும் களமிறங்கும் வைகோ
இம்முறை விருதுநகரில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளுமே பிரபல வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. களம் அதே களம்தான் ஆனால் போட்டி கடுமையானதாக இருக்கிறது. விருதுநகரை வென்று வாகை சூடுவாரா வைகோ? வாக்காளர்களின் கையில்தான் இருக்கிறது தீர்ப்பு.