மலேசியாவில் வைகோவுக்கு அவமரியாதை… சீமான் கண்டனம்
மலேசியாவிற்கு சென்ற வைகோவை அவமரியாதை செய்த அந்நாட்டு அரசிற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொணடு பேசியதாவது: நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. குடிக்க தண்ணீர் இல்லை. உணவிற்கு வழி இல்லை. காருக்கு வழி இருக்கு. செல்போனுக்கு வழி இருக்கு. எல்லாத்திற்கும் திட்டம் இருக்கு. ஆனால் 130 கோடி மக்களுக்கு குடிக்கும் தண்ணீருக்கும், உணவிற்கும் திட்டம் இல்லை.
அதனால் தான் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் அழிவு தான் இதற்கு காரணம். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் வாக்காளர்களாக மட்டுமே உள்ளீர்கள்.
திட்டமிட்டு இந்தியை திணித்து வருகின்றனர். இந்தியை படியுங்கள். ஆனால் வேலைக்கு வெளிமாநிலங்களுக்கு செல்லுங்கள். தமிழகத்தில் தமிழ்படித்தால் மட்டுமே வேலை. ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் தேவையில்லை.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற வைகோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தனி மனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. நமது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அ.தி.மு.க அரசு அல்ல. பா.ஜ.க அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, மீத்தேன், ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு சீமான் கூறினார்.