ஆர்எஸ்எஸ் ஹிட்லரிசத்தை திராவிட இயக்கங்கள் அரண் போல நின்று தடுக்கும்: வைகோ ஆவேசம்
ஈரோடு: ஆர்எஸ்எஸ் ஹிட்லரிசத்தை திராவிட இயக்கங்கள் அரண் போல நின்று தடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
ஈரோட்டில் ம.தி.மு.க.வின் இரண்டாவது மாநாடு வருகின்ற 15ந் தேதி முப்பெரும் விழா மாநாடாக நடக்க உள்ளது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கருணாநிதி திருவுருவ படத்தை திறந்து வைக்க உள்ளார். அதே போல் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சரத் பவார், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, யஷ்வந்த் சின்கா, காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் திருஞாவுக்கரசர், சி.பி.எம், செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ.இரா.முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, நடிகர் சத்தியராஜ், திருமுருகன் காந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இந்திய அரசியலில் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்லாது, ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மத்திய பாசிச பாஜகவின் நிலைப்பாட்டை மிக கடுமையாக எதிர்கிறோம். ஆர்.எஸ்.எஸ்சின் ஹிட்லரிசம் இந்திய மண்ணில் ஊடுருவ விட மாட்டோம். திராவிட இயக்கங்கள் அரண் அமைத்து அதை தடுக்கும். அதற்கு திமுகவுடன் மதிமுக இணைந்தே கரம் கோர்த்து செல்லும்.
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வருகின்ற 10ந் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்திற்கு மதிமுக அதரவு அளித்துள்ளோம்.
7 தமிழர் விடுதலை பிரச்சினையில் மதிமுக சார்பில் ராம்ஜெத்மலானி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதால், 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இனி இருக்காது என நம்புகிறேன். குட்கா விவகாரத்தில் ரெய்டுக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.