ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்: வைகோ
திருச்சி: ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் ‘நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இறுதி போட்டி நடந்தது.
போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாநில அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ம.தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் மண்டல அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் உரையாற்றி தங்களது பேச்சுத்திறமையை வெளிப்படுத்தினார்கள்.
முதல் பரிசு ரூ.1லட்சம்
முதல் இடத்தை பிடித்த மாணவர் சரவண சித்தார்த்துக்கு ரூ.1 லட்சம், 2-வது இடத்தை பிடித்த ராமேசுவரம் மாணவி தஸ்லீமா நஸ்ரீனுக்கு ரூ.50 ஆயிரம், 3-வது இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவர் பிரபாகருக்கு ரூ.25 ஆயிரம், 4-வது இடத்தை பிடித்த தாம்பரம் மாணவி இலக்கியாவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசினை வைகோ வழங்கினார். மற்ற சாதனையாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.
மத்திய அரசு காரணம்
பின்னர் மாணவர்களிடையே பேசிய வைகோ கூறியதாவது:
வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது இலங்கைக்கு ராணுவ உதவியோ, பணத்திற்காக ஆயுதமோ விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்தார். அவர் பிரதமராக இருக்கும் வரை இந்த உறுதிமொழியை பாதுகாத்தார்.
ஆனால் 2004-ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமர் ஆனதும் சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர்தான் காரணம்.
தோல்வி கிடையாது
டெல்லியில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசியபோது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். இதற்கு காரணமானவர்களை மக்கள் தீர்ப்பாயம் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டேன். ஈழப்போர் முள்ளிவாய்க்காலோடு முடிவு பெற்றுவிட்டது என நினைக்க வேண்டாம். முள்ளி வாய்க்கால் மூலம் புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. தமிழீழம் அமைப்பதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர்வதை நான் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும்.
ஊழலை வெல்ல வேண்டும்
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தட்டிக்கேட்க தயங்க கூடாது, ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் பாராளுமன்ற தேர்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எந்த களத்தில் இருந்தாலும் நாங்கள் முழு மன வலிமையோடு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.
கட்சி சார்பற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவர்கள் அனைவரும் வைகோவினை தலைவர் என்றே அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.