பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா.. வைகோ ஆவேசம்
மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா என்று வைகோ ஆவேசமாக கேள்விகேட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின்னர் வைகோ இவ்வாறு கூறினார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து வைகோ இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரட்ஜோ மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படை நடுகடலில் அவரை சுட்டுக் கொன்றது. மேலும், அவருடன் சென்ற சரோன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

தங்கச்சி மடத்தில் வைகோ
இதனையடுத்து, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் வைகோ இன்று திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, இலங்கை அரசைக் கண்டித்து கடுமையாக பேசிய வைகோ, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்.

பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல்
இதனையடுத்து, சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் வீட்டிற்கு வைகோ சென்றார். அங்கு அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

இந்தியாவின் பிரஜைகள்தானே..
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள்தானே என்று கேள்வி கேட்டார். இந்த அட்டூழியத்தை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மான ரோசம்..
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை அராஜகம் செய்து வருகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா என்று வைகோ ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி மிகவும் நல்லவர், நல்ல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று அன்றாடம் நற்சான்றிதழ் கொடுக்கும் வைகோவே இதனை மோடியிடம் நேரில் கேட்கலாம் என்று அங்கிருந்த மக்கள் முணுமுணுத்தனர்.












Click it and Unblock the Notifications