வானதி சீனிவாசனுக்கு ‘ஐ லவ்யூ’ சொன்ன நபருக்கு ரூ. 500 அபராதம் + கடும் எச்சரிக்கை!
கோவை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்தில் செலுத்தியதைத் தொடர்ந்து அந்நபர் போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், அக்கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது வானதி சீனிவாசனுடன் கட்சி தொண்டர்கள் சிலர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது கையில் பூங்கொத்துடன் முத்துவேல் என்ற நபர் வானதியுடன் புகைப்படம் எடுக்க வந்தார்.
ஆனால் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வானதியின் கையில் பூங்கொத்து கொடுக்க முயற்சித்த அந்நபர், தனது காதலையும் தெரிவிக்க முயன்றார். இதைக் கேட்டு வானதி சீனிவாசனும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
தப்பி ஓட முயற்சித்த அந்நபரை கட்சி நிர்வாகிகள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்நபரின் பெயர் முத்துவேல் என்றும், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வரும் முத்துவேல், பாஜக உறுப்பினர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக வானதி சீனிவாசன் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனபோதும் பொது இடத்தில் அத்து மீறுதல், அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப்பிரிவுகளில் முத்துவேல் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முத்துவேல் ஆஜர் படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதைத் தொடர்ந்து முத்துவேல் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications