இளைஞர் மர்ம மரணம்... தங்க மகன் மாரியப்பனுக்கு மீண்டும் சிக்கல்.. வி.ஏ.ஓ. போலீசில் பரபரப்பு புகார்
சேலம்: இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மீது டேனிஷ்பேட்டை விஏஓ சவுரிராஜன், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ரியோவில் கடந்த 2016-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

இந்நிலையில் மாரியப்பன் ரூ.27 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. சாலையில் இருந்த அந்த காரை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் தன் பைக்கில் இடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட மாரியப்பனும், அவரது நண்பர்களும் தட்டி கேட்டதோடு வீடு புகுந்து சேதத்துக்கு உண்டான செலவை தருமாறு மிரட்டினாராம். அதற்கு சதீஷ்குமார் வண்டி சேதத்திற்காகும் செலவை தான் ஏற்பதாக கூறியும் அவரிடம் இருந்த செல்போனை மாரியப்பனும், நண்பர்களும் பறித்து சென்றனராம். இந்த சம்பவத்துக்கு பின்னர் சதீஷ்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியவடகம்பட்டி அருகே உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் சதீஷ்குமார் சடலமாக கிடந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக இறந்த சதீஷ்குமாரின் தந்தை மூர்த்தி, மாரியப்பன், அவரது தாய் சரோஜா, மாரியப்பனின் நண்பர்கள் ஆகியோர் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்கொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, டேனிஷ்பேட்டை விஏஓ சவுரிராஜன் நேற்று மாலை, தீவட்டிப்பட்டி போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார் வீட்டிற்கு வந்த மாரியப்பன், அவருடைய நண்பர்கள் சபரி, யுவராஜ் ஆகியோர் காரை சேதப்படுத்தியதற்கு பணம் கேட்டு சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின்னர் தான் சதீஸ்குமார் தண்டவாளம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தங்க மாரியப்பனுக்கு எதிராக வி.ஏ.ஓ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications