வர்தா.. சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல்.. தண்ணீர் வெளியேற்றும் பணி துரிதம்
சென்னை விமான நிலைய ஓடுதளம் மாலை 6 மணிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே காலை 11 மணி நிலவரப்படி, 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகின. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 7 சர்வதேச விமானங்களும் கூட தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் மழையும், காற்றும் விடாத காரணத்தால், மதியம் 3 மணிவரை ஓடுதளம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அப்போதும் நிலைமை மோசமாக இருந்ததால் மாலை 6 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெள்ளம் வடியவில்லை என்பதால் இரவு 8 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் புயல் ஆந்திராவின் தெற்கு பகுதி வழியாக செல்லும் என்பதால், திருப்பதி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாம். இவ்விரு விமான நிலையங்களுக்கு வர வேண்டிய விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.