தேமுதிக சின்னம் பம்பரமா?, திருமாவளவன் சின்னம் முரசா?.. பிரசாரத்தில் குழம்பிய வாசன், பிரேமலதா
விருதுநகர்: தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கட்சி சின்னம் பம்பரமா என கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் செய்யது காஜா ஷெரிப்பை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி நேற்று இரவு வாசன் வாக்குவேட்டையாடினார்.
வாசன் பேசுகையில், "தோல்வி பயத்தால் சில கட்சிகள், பிற கட்சிகளை உடைக்க முயலுகின்றன. இம்முறை நீங்கள் ம.ந.கூவுக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் சுக துக்கங்களில் பங்கு பெறும் வேட்பாளர் ஷெரிப்புக்கு.." இவ்வாறு கூறிய வாசன் பேச்சை நிறுத்திவிட்டு, அருகில் நின்றவரிடம், "பம்பரமா?" என கேள்வி எழுப்பினார். அவர் முரசு என்று கூறியதும், ஷெரிப்புக்கு, முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.
இதன்பிறகு சமாளித்துக் கொண்டே, "நீங்கள் எல்லாம் கவனமா இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளவே இப்படி (பம்பரமா என்று) கேட்டேன்" என்று சிரித்தபடியே உரையை முடித்தார் வாசன்.
மதிமுகவின் சின்னம் பம்பரம் என்பதும், தேமுதிகவின் சின்னம் முரசு என்பதையும், வாசன் எப்படி மறந்தார் என சலசலத்தது கூட்டம்.
இதனிடையே நேற்று பண்ருட்டியில் பிரசாரம் செய்த தேமுதிகவின் பிரசார பீரங்கியான, பிரேமலதா, காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் திருமாவளவனை முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். பிறகு திருத்திக் கொண்டு மோதிரம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
கூட்டணி குழப்பம் பெரும் குழப்பமா இருக்கும்போலயே.