மதுவிற்கு "நோ” சொன்ன பாமக நிர்வாகிக்கு அடி,உதை- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது புகார்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உணவகத்தில் மது குடிக்க அனுமதிக்காத பா.ம.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த மடதஹள்ளியை சேர்ந்த அண்ணாமலை மகன்கள் பாண்டியன், அம்பேத்கர். அரசு போக்குவரத்து கழகத்தில், அம்பேத்கர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், கடத்தூரில் உள்ள முனுசாமி என்பவரது உணவகத்துக்கு சாப்பிட சென்றனர். அப்போது, இருவரும் சாப்பாடு மேஜையின் மீது அமர்ந்து கொண்டு மதுபானம் குடிக்க முயன்றுள்ளனர். இதைப்பார்த்த முனுசாமியின் மகன் இளங்கோவன் கடையில் மது குடிக்க அனுமதியில்லை என்று அம்பேத்காரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், அம்பேத்கர் ஆகிய இருவரும் சேர்ந்து இளங்கோவனை தாக்கியுள்ளனர். மேலும், இதை தடுக்க வந்த முனுசாமி மற்றும் அந்த உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பா.ம.க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கனல் ராமலிங்கத்தையும் தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த மூவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அவர்கள் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் பாண்டியன், அம்பேத்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, நேற்று பா.ம.கவினர் மற்றும் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டார். இதையடுத்து, போலீசார் பாண்டியனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அம்பேத்கரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.