ஒரு தொகுதி ஒதுக்கீடு... கொந்தளிப்பில் விடுதலை சிறுத்தைகள்
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதற்கு சிதம்பரம் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு தி.மு.க.விற்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது என்று விளங்கவில்லை என்று கூறியுள்ளார்.
நான் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்து இடுவதற்காக அண்ணா அறிவாலயம் புறப்பட்டபோதே, எங்கள் கட்சி நிர்வாகிகள், நமக்கு ஒரு இடம் மட்டும் தந்தால் ஒத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள். ஆனால், நான் கூட்டணி தர்மத்தை மனதில் வைத்து, மதச்சார்பின்மை, சமூக நீதிக் கோட்பாட்டை காப்பாற்ற, வாக்கை சிதறவிடாமல் காப்பாற்ற ஒரு தொகுதி ஒதுக்கியதை ஒத்துக்கொள்ள முடிவு செய்தேன்.
4, 5, 6 ஆகிய 3 நாட்கள் தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட 2 தொகுதிகளையாவது மீண்டும் தருமாறு கேட்டோம். ஆனால், அவர்களுக்கு என்ன நெருக்கடி என்று எங்களுக்கு விளங்கவில்லை.
சிதம்பரம் தொகுதியை மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தருவதாக, என்னிடம் கலைஞர் தெரிவித்தார். இந்த நிலையில், கொடுப்பது ஒன்றாக இருந்தாலும் கொள்கையில் ஒன்றாக இருக்க முடிவு செய்தோம்.
இதற்கு கட்சி தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நமது வாக்குகளை சிதறவிடக்கூடாது. வேண்டுமென்றே கூட்டணிக்கு எதிராக சிலர் சீண்டி விடுவார்கள். அதற்கு நாம் இரையாகிவிடக்கூடாது.
எங்கள் கட்சி தொண்டர்கள் என்னிடம், வட மாவட்டங்களில் 20 தொகுதிகளில் நாம் வலுவாக உள்ளோம். தொகுதிக்கு தலா 60 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைக்கும். மற்ற தொகுதிகளில் தலா 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். இவ்வாறு வாக்கு வங்கி உள்ள நமது கட்சிக்கு 2 தொகுதிகளாவது கொடுக்க கூடாதா? என்று கேட்கிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஸ்டாலின், கருணாநிதியின் கொடும்பாவிகளை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.