கூட்டணியில் இருந்து வெளியேறி பலத்தை நிரூபிக்க வேண்டும்: வி.சி.கவினர் வலியுறுத்தல்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட்டு வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் கருத்து கூறியுள்ளார். அதேபோல தி.மு.க. நம்பிக்கை துரோகம் செய்கிறது. எனவே கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் பாவாணன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், கிடைத்தது 1 தொகுதி மட்டுமே. இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்தத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கி என்ன என்பதைகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு முறையாவது தனித்துப் போட்டியிடாமல் தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் தனது பேர வலிமையை அதிகரித்துக் கொள்ள முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் பாவாணன் கூறியதாவது:
தி.மு.க. தலைமையுடன் தலைவர் திருமாவளவன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 1 தொகுதியை மட்டும் அக்கட்சி எங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 5 தொகுதிகளை எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு இது ஏமாற்றத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபடி 2 தொகுதியை கூட ஒதுக்காமல் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தி.மு.க. துரோகம் செய்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் தலைவர் திருமாவளவன் அதிகமான பற்று உடையவர். தி.மு.க. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசுடன் சேர்ந்து அவப்பெயர் பெற்றிருந்தது. அதனை துடைத்தெறிந்ததே எங்கள் தலைவர் திருமாவளவன் தான்.
துரோகம் செய்யும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவோம் என தலைவர் திருமாவளவனிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.