தில் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள்... வீரமணி, சுப.வீ சவால்!
தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று எச். ராஜாவின் கருத்துக்கு கி.வீரமணி மற்றும் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல் தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு சர்ச்சையான கருத்தை எச். ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எச். ராஜாவின் இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
எச். ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது : திரிபுராவில் ஆட்சிக்கு வந்த உடனேயே காளித்தனங்களை செய்கிறார்கள், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இப்படி பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அதை அவர்கள் உடைக்கட்டும், அதனை வரவேற்கிறோம்.
தில் இருந்தால் உடைத்துப் பாருங்கள்
அதனுடைய விளைவுகளையும் அறுவடை செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் விரைந்து செய்யட்டும், விரைந்து அதற்கான பலன்களை அடையட்டும். தில் இருந்தால் பெரியார் சிலையை உடையுங்கள்.
எந்த அரசின் தைரியத்தில்
அதன் பிறகு பாஜகவினர் தமிழகத்தில் நடமாட முடியுமா என்பதை பார்க்க வேண்டும். பெரியார் சிலையை உடைத்துப் பார்க்கட்டும், எந்த அரசின் தைரியத்தில் அவர் இவ்வாறு பேசுகிறார் என்பதை மக்கள் தெளிவாக உணர்கிறார்கள். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றியைத் தான் சொல்கிறேன் என்று வீரமணி கூறியுள்ளார்.
பொருந்தாத கேள்வி
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் எச்.ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவிக்கையில் : முதலில்
லெனின் சிலை அகற்றப்பட்டு உடைக்கப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன். லெனின் மிகப்பெரும் சிந்தனையாளர், உலகத் தலைவர். லெனினிற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்று ராஜா கேட்கிறார், தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, இது போன்ற பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. அவர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் அப்புறப்படுத்தி விடலாமா.
வன்முறையை உருவாக்கும்
இந்த போக்கு அரசியல் நாகரிகமில்லாத வன்முறைக்குத் தான் வழித்தோன்றுகிறது. பெரியார் சிலையை உடைப்போம் என்கிறார், தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள். ஆட்சிக்கு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெரியார் சிலைகளை உடைக்கச் செய்யுங்கள். வன்முறை தான் தீர்வு என்று ராஜா முடிவு செய்துவிட்டால் அதனை சந்திக்க தமிழகம் தயாராக இருக்கிறது.
வழக்கு பதிவு செய்ய வேண்டும்
அட்டூழியம், பாசிசத்தை எச். ராஜா அவிழ்த்து விடுகிறார். பெரியாரை போற்றாத கட்சிகளும், ஏற்காத ஆட்சியும் இல்லை உடனடியாக எச். ராஜா மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.