விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
பாஞ்சாலங்குறிச்சி: ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட நாள் அக்டோபர் 16.
வணிகம் செய்ய வந்து நாடு பிடி வெறியால் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரச்சமர்களை நடத்தியது தமிழ் மண். ராணி மங்கம்மாள், திப்புசுல்தான் வரிசையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மனும் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார்.
மாமன்னர்கள் மருது சகோதரர்களின் சம காலத்தவரான வீரபாண்டிய கட்டபொம்மன் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். அவரை ஆங்கிலேயர் அதிகாரி பானர்மேன் கயத்தாறில் புளிய மரத்தில் தூக்கிலிட உத்தரவிட்டார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது வயது 39.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரைவடிவில் உயிர் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.