வேலூர், தஞ்சை, நாமக்கல்லில் வறுத்தெடுக்கும் வெயில்.. 100 டிகிரியை எட்டியது
வேலூர், நாமக்கல், தஞ்சையில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது.
வேலூர்: கோடையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வேலூர், நாமக்கல், தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருகிறது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில் வேலூர், நாமக்கல், தஞ்சையில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர் போன்ற மத்திய மாவட்டங்களிலும் கோடையின் தொடக்கத்திலேயே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. நேற்று முன்தினம், வெயிலின் தாக்கம் அதிகரித்து 99 டிகிரியாக பதிவானது. நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 100 டிகிரி, நாமக்கலில் 100 டிகிரி மற்றும் தஞ்சாவூரில் 100 டிகிரி வெயில் பதிவானது.
சுட்டெரிக்கும் வெயிலால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்கள் பெரிதும் அவதிபட்டனர். வெயிலை விட அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றாலே படபடப்பும், மயக்கமும் உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே இப்படி வெயில் கொளுத்துவதால் இனி வரும் நாட்களில் எவ்வாறு இருக்கும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.