தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை... தி.வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பது போன்று தெரியவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பது போன்று தெரியவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொறையாறில் அரசு போக்குவரத்து பணிமனை ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இடிந்து விழுந்த மேற்கூரை
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் ஓட்டுநர்கள், ஒருவர் நடத்துனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தொடர்கிறது. இரவுப் பணி முடிந்து ஓய்வறையில் ஊழியர்கள் 20 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அது பழமையான கட்டடம் என்று தெரிகிறது.இதே போன்றதொரு நிகழ்வு கடந்த மாதம் கோவையில் ஏற்பட்டது.
அரசு என்ற ஒன்று உள்ளதா
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்துவிழுந்து 5 பேர் பொதுமக்கள் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர். இத்தனைக்கும் இந்த பஸ் நிலையம் 1997ல்தான் கட்டப்பட்டது. கோவை பஸ் நிலைய விபத்தை அடுத்து தமிழகமெங்கும் போக்குவரத்துக் கட்டடங்கள் தொடர்பாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்காததன் விளைவுதான் இந்தப் பொறையாறு பணிமனைப் பலிகள்.மேலும் கடந்த ஓராண்டாகவே தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.
சோமனூர்,பொறையாறு உயிரிழப்புகள்
அப்படி அரசு என்ற ஒன்று இருப்பதாக அதில் அங்கம் வகிப்போர் சொல்வார்கள் என்றாலும், அது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை; மாறாக, அதைத் தங்களுக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாகப் படுகிறது.அதன் காரணமாகவே கோவை சோமனூரிலும் நாகைப் பொறையாறிலும் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
இந்தக் கொடூரத்திற்கு அரசைக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இதுபோல் இனி நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்துகிறது.