அனுமதிக்கு நன்றி.. ஆனால் ஜல்லிக்கட்டுக்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு நன்றி.
எனினும், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளையும், நிபந்தனைகளையும் நிரந்தரமாக நீக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி.தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர், "தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக குரல் கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், தென்மாவட்ட மக்கள், கலாசார பண்பாட்டு அமைப்புகள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
குறிப்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கு பெரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிகட்டை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி இன்று அதிலே வெற்றியும் பெற்று தமிழக மக்களின் மனங்களில் நிம்மதி, மகிழ்ச்சி ஒளியேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையிலும் காட்டிலே வாழக் கூடிய வனவிலங்குகளான கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றுடன் வீடுகளில் குழந்தைகளைப் போல வளர்க்கப்படும் காளைகளும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர்தம் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுவை நடத்துவதற்கு பல்வேறு அனுமதிகளையும் பெற வேண்டும் என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வரும் காலத்தில், காடுகள் வாழ் வனவிலங்குகளின் பட்டியலில் வீடுகளில் வளர்க்கப்படும் விவசாயிகளின் உற்ற தோழனாக திகழும் காளைகளை இணைத்திருப்பதை நீக்கவும். ஆண்டுதோறும் ஜல்லிகட்டு நிகழ்வுகளை எந்த ஒரு நிபந்தனையுமில்லாமல் பாரம்பரியமாக நடத்துவதைப் போல சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.