"புரட்சித்தலைவி" என்று ஜால்ரா அடித்த வெங்கையா... "முதல்வரோடு" நிறுத்திக் கொண்ட தமிழிசை!
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, வாய்க்கு வாய் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று பேச, அவரது பேச்சை மொழி பெயர்த்த தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புரட்சித் தலைவி என்று கூறாமல் முதல்வர் என்று மட்டும் கூறினார்.
நாயுடு பேசுகையில், மறைந்த அப்துல் கலாம் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றார். அவர் ஒரு ஏவுகணை மனிதராக உலா வந்தவர். நாடு பொருளாதாரத்தில் வல்லமை பெற வேண்டும் என்று விரும்பியர். கலாமிற்காக அம்ருத் திட்டத்தில் ராமேஸ்வரம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அப்துல் கலாம் நினைவிடம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கிக் கொடுத்த புரட்சித்தலைவி முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அவரது உரையை மொழி பெயர்த்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வருக்கு நன்றி என்று மட்டுமே கூறினார்.
கலாம் சிலை திறப்பு
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளில் ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
வெங்கையா நாயுடு புகழாரம்
இவ்விழாவில் தொன்மை மொழியாம் தமிழில் தாம் பேச முடியாதது வருத்தமளிப்பதாக கூறினார். வெங்கய்யநாயுடுவின் ஆங்கில பேச்சை தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை மொழி பெயர்த்தார்.
இதயங்களில் வாழ்கிறார்
அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாக, நாட்டின் ஜனாதிபதியாக, சமூக சேவராக, மாணவர்களுக்கு கிரியா ஊக்கியாக திகழ்ந்தார் என்றார். மறைந்த அப்துல் காலம் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அணுகுண்டு சோதனை
கலாம் அவர்கள் திருமணம் செய்யாமல் நாட்டின் வளர்ச்சியை மணமுடித்தவர் என்றார். அணுகுண்டு சோதனைகள் மூலம் நாட்டின் திறமையை உலகிற்கு பறைசாற்றியவர். நாட்டின் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி இரண்டு பதவிகளிலுமே அப்துல் கலாம் முற்றிலும் மாறுப்பட்டவராக திகழ்ந்தார் என குறிப்பிட்டார்.
ஏவுகணை மனிதர்
ராமேஸ்வரம் கலாமின் ஆன்மாவுடன் கலந்த நகரம். ஏவுகணை மனிதராக உலா வந்தவர் கலாம்.
இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த மண்ணில் வாழ்ந்தார் என்று நினைத்து பார்க்கும்போது ஆச்சரியத்தை அளிக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார். இந்த மண்ணில்தான் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது.
முதல்வருக்கு நன்றி
இவர் மாமனிதராக திகழக் காரணம் அவரது எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்ததுதான். கலாம் மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்த புரட்சித்தலைவி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் வெங்கையா நாயுடு. ஆனால் உரையை மொழி பெயர்த்த தமிழிசை முதல்வருக்கு நன்றி என்று மட்டுமே கூறினார்.
மாத்தி மாத்தி ஜால்ரா!
சமீபத்தில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை தமிழகத்தின் நண்பர் என்று கூறி பாராட்டி பேசினார் முதல்வர் ஜெயலலிதா. இன்றைய தினம் அப்துல் கலாம் நினைவு தின விழாவில் பேசிய போது ஆரம்பத்திலும், இறுதியிலும் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தார் வெங்கையா நாயுடு.