2 பக்கமும் அடி வாங்கியாச்சு.. இப்போ யாருக்கு ஆதரவு? விஜய் ரசிகர்களின் டெலிகேட் பொஷிஷன்!
சென்னை: சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பதில் பிற நடிகர்கள் ரசிகர்களைவிட விஜய் ரசிகர்கள் ரொம்பவே குழம்பி போயுள்ளனர்.
தமிழகத்தில் நடிப்பு துறையையும், அரசியல் துறையையும் பிரிக்க முடியாது. அரசியலில் நடிகர்கள் வாய்சுக்கு பெரும் மதிப்பு இருந்து வருகிறது.
2011ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்து வெளியான காவலன் திரைப்படம், அப்போதைய திமுக அரசு மற்றும் தலைமையின் குடும்பத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்களால் நெருக்கடிக்கு உள்ளானது. நடிகர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தலைவா சிக்கல்
கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிக்கு எதிராக, எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஜெயலலிதா அரசு நடைபெற்றபோது, 'தலைவா' திரைப்படம் 'time to lead' என்ற சப்-டைட்டிலுடன் வெளியானது.
இழுபறி
இதை பார்த்து, விஜய் அரசியலில் குதிக்கப்போகிறார் என்று யாரோ கொளுத்திப்போட, தலைவா படத்தை வெளியேவிடாமல் இழுபறி நிலையை ஏற்படுத்தியது அரசு. இதன்பிறகு அரசியல் வசனங்களோடு வெளியாகும் விஜய் படங்களுக்கெல்லாம் தொல்லைகள் தொடர்ந்தன.
மறுப்பு அறிக்கை
இந்நிலையில், ஜெயலலிதா அரசில் விஜய் படங்களுக்கு தொல்லை தரப்பட்டதை முன்வைத்து, அதிமுகவை தோற்கடிக்க விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை உடனேயே மறுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இருபக்கமும் அடி
இதனால் திமுகவுக்கு வாக்களிப்பதா, அதிமுகவுக்கு வாக்களிப்பதா, பிற கட்சியில் ஏதாவது ஒன்றுக்கு வாக்களிப்பதா என்ற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தாலும், குடும்பத்தாரின் ஆதிக்கம் சினிமா துறையில் ஓங்கும், ஜெயலலிதா ஆட்சியில் அலக்கழிக்கப்பட்டுள்ளோம், எனவே அதுவும் வசதிப்படாது என்பது விஜய் ரசிகர்கள் எண்ணமாக உள்ளது.
2ஜி ஊழல் பேச்சு
கத்தி திரைப்படத்தில் 2ஜி ஊழலுக்கு எதிராக, சிவப்பு சட்டை அணிந்து, விஜய் உச்ச ஸ்தாபியில் பேசிய வசனம் அவர் திமுகவுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிவப்பு சட்டை கட்சியான கம்யூனிஸ்டுகள் இருக்கும் மக்கள் நல கூட்டணிக்கு வாக்களிக்கலாமா என்பது விஜய் ரசிகர்களில் சில பிரிவினர் யோசனையாக உள்ளது.
சீமான் ஆதரவு
சில மண்டலங்களிலுள்ள விஜய் ரசிகர்களின் எண்ணம் வேறு மாதிரியாக இருப்பது அவர்களிடம் பேசியதில் இருந்து தெரியவந்தது. ரசிகர் மன்ற நிர்வாகி நம்மிடம் கூறுகையில் 'விஜய்க்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், அவருக்காக குரல் கொடுத்தது சீமான். "கேரளாவை சேர்ந்த எம்ஜிஆரை கொண்டாடினோம், கர்நாடகாவை சேர்ந்த ரஜினியை கொண்டாடினோம், தமிழகத்தை சேர்ந்த பிள்ளை விஜய் இப்போது பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரை குறி வைக்காதீர்கள்" என்று வெளிப்படையாக பேசியவர் சீமான். எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம் என்பது பல ரசிகர்களின் யோசனையாக உள்ளது' என்றனர்.
உரலுக்கு ஒருபக்கம்தான் இடி
உரலுக்கு ஒருபக்கம் இடி என்பார்கள். இரு ஆட்சிகாலத்திலும் நெருக்கடிக்கு உள்ளான விஜயோ, மத்தளம் போல இருபக்கமும் இடிபட்டு தவிப்பவர். எனவே இந்த தேர்தலில் அவரது ரசிகர்கள், நடந்த சம்பவங்களுக்கு, எப்படி பதிலடி தருவது என்ற தீவிர யோசனையில் இருக்கிறார்களாம்.