நடிகர் விஜய் 5 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பு: ஐ.டி. அதிகாரிகள் 'அதிர்ச்சி' தகவல்!
சென்னை: இளைய தளபதி விஜய் கடந்த 5 ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் புலி படம் நேற்று ரிலீஸானது. முன்னதாக கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, அலுவலகம், புலி படத் தயாரிப்பாளர்கள் பி.டி. செல்வகுமார், ஷிபு தமீன்ஸ், பைனான்ஷியர் ரமேஷ், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகள் என மொத்தம் 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
விஜய்
விஜய் உள்பட புலி படக்குழுவினர் அனைவரும் தாங்கள் சம்பாதித்த பணம் முழுவதிற்கும் வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ரூ.25 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். விஜய் கடந்த 5 ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரொக்கம், தங்கம்
நாங்கள் விஜய் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையின்போது சிக்கிய ரூ.2 கோடி ரொக்கம், ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா
கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவல்லா ஆகிய இடங்களில் உள்ள நயன்தாரா வீடுகளில் சோதனை நடத்தியதில் அவர் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
சமந்தா
நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளில் நடத்திய சோதனையில் அவரும் கடந்த 2 ஆண்டுகளாக தான் சம்பாதித்த பணத்திற்கு முழுமையாக வரி செலுத்தாமல் ஏய்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.