பேனர் கிழிப்பு விவகாரம்: இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து நீக்க விஜயதாரணி போர்க்கொடி
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த விஜயதாரணி எம்.எல்.ஏவின் பேனரை கிழித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நீக்குங்கள் என்று மாநில மகளிரணித்தலைவி விஜயதாரணி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கட்சி மேலிடத்தலைவர் சோனியாகாந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார் விஜயதாரணி.
சத்தியமூர்த்தி பவனில் சலசலப்பு இல்லாத நாட்களே இல்லை என்றுதான் கூறவேண்டும். சண்டையும், கதர்சட்டை கிழியறதும் சத்தியமூர்த்தி பவனில் சகஜம்தான் என்றாலும் மகளிரணித்தலைவி விஜயதாரணிக்கும், மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் இப்போது ஏற்பட்டுள்ள மல்லுக்கட்டுதான்லேட்டஸ்ட்.
இதற்கு காரணம் விஜயதாரணியின் பேனரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆட்கள் கிழித்ததுதான் என்கின்றனர். அவர்களை இளங்கோவன் கண்டிக்காமல் தன்னை தரக்குறைவாக பேசினார் என்பதும் விஜயதாரணியின் குற்றச்சாட்டாக உள்ளது.
மகளிரணி கொண்டாடிய இந்திரா பிறந்தநாள்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98வது பிறந்தநாள் விழாவும், தமிழக மகிளா காங்கிரசின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் நவம்பர் 19ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதனையொட்டி சத்தியமூர்த்தி பவன் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரில் மாநில தலைவர் இளங்கோவன் படத்துக்கு இணையாக விஜயதாரணி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்திராகாந்திக்கு மரியாதை
காலை 11மணிக்கு இந்திராகாந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது. தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்களும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர். குஷ்பு வந்த உடன் தலைவர்கள் அனைவரும் இந்திரா காந்தி படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அவசரட் அவசரமாக கிளம்பினர்.
விஜயதாரணி பேனர் கிழிப்பு
போகிற போக்கில் இளங்கோவனின் ஆதரவாளர்கள் பேனரில் இருந்த விஜயதாரணியின் படத்தை கிழித்த கையோடு பேனரையும் எடுத்துச் சென்றுவிட்டார்களாம். இதனால் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர்.
மகளிரணி தனி கோஷ்டி
மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா உடன் வந்திறங்கினார் விஜயதாரணி தனது பேனரைக் காணாமல் கோபம் அடைந்தார். பேனரை கிழித்தது இளங்கோவன் ஆட்கள்தான் என்பதை அறிந்த அவர், சத்தம்போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சலசலப்பு உருவானது.
ஒருமையில் பேசிய விஜயதாரணி
அன்றைய தினம் விஜயதாரணி பேட்டியின்போது ‘இளங்கோவன்' என்று குறிப்பிட்டார். அதை கேட்டதும் மாநில தலைவரை பெயரை மட்டும் சொல்லி ஒருமையில் அழைக்கலாமா? என்று இளங்கோவன் ஆதரவு மகளிர் நிர்வாகி ஒருவர் கேட்டுள்ளார்.இதை விஜயதாரணி ஆதரவு பெண் நிர்வாகி ஒருவர் மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கூறி இருக்கிறார்.
இளங்கோவனிடம் வாக்குவாதம்
இதை கேள்விப்பட்டதும் இரு பெண் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அந்த நேரத்தில் சத்திய மூர்த்தி பவனில் இருந்த விஜயதாரணி ஆவேசத்துடன் இதுபற்றி கேட்க இளங்கோவன் அறைக்கு சென்றுள்ளார்.அவர் இளங்கோவனிடம், பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் கூறினார்.
வெளியே போகச்சொன்ன இளங்கோவன்
கோபத்தில் கொந்தளித்த அவரை பார்த்ததும் கேட்கிறேன் என்று இளங்கோவன் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் விஜயதாரணி விடாமல் கோபத்தில் சத்தம் போட்டுள்ளார். அதை கேட்டதும் இளங்கோவனும் பொறுமை இழந்து வெளியே சென்று கத்துங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தரக்குறைவாக பேசினாரா?
இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர், தன்னை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகவும், கட்சியை விட்டுப்போகச்சொன்னார் என்றும், பெண் நிர்வாகிகளை மதிக்காத இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். துணைத்தலைவர் ராகுல்காந்திக்கும் விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு
ஏற்கனவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியிடம் புகார் அளித்தனர். இப்போது மகளிரணித்தலைவியும் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.