விஜயகாந்துடன் மீண்டும் கூட்டணி பற்றி பேசினோம்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கூட்டணி தொடர்பாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் உரையாடியதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உருவாக்கிக்கொள்வதிலும், ஏற்கனவே உள்ள கூட்டணியை பலப்படுத்திக்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மக்கள்நலக் கூட்டணி சார்பில் அந்த கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசி தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர்.
அதே நாளில் திமுக தலைவர் கருணாநிதியும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தார்.
லோக்சபாத் தேர்தலைப் போலவே சட்டசபைத் தேர்தலிலும் பாஜக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் விஜயகாந்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர், ‘வரும் 20ம் தேதிக்குள் கூட்டணி குறித்து இறுதி செய்ய வாய்ப்பிருக்கிறது. இன்றைய சந்திப்பின் போதும், விஜயகாந்திடம் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசப்பட்டது' என்றார்.