மக்கள் நல கூட்டணிக்கு குட்பை.. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக!
சென்னை: உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியேற தேமுதிக தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான அடிமட்ட நிர்வாகிகள் அக்கூட்டணியை தொடர விரும்பாததால் விஜயகாந்த் இம்முடிவை எடுக்கக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக படுதோல்வியடைந்தது. விஜயகாந்த் உட்பட 103 பேர் டெபாசிட்டை இழந்தனர்.
வாக்கு சதவீதம் மிக மோசமாக சரிந்தது. அதிக சீட்டுகளை வெல்ல வாய்பில்லை என்று விஜயகாந்த்தால் கணிக்கப்பட்ட திமுக, பெரிய கூட்டணி இல்லாமலேயே 89 தொகுதிகளை வென்றுவிட்டது.
ஆலோசனை
இந்த தோல்வியால் விஜயகாந்த் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தோல்விக்கான காரணம் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அடிமட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் ஒன்றியம், நகரம், மற்றும் மாநகர பகுதி செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கூட்டணி மீது குற்றச்சாட்டு
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலானவர்கள் மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உழைக்கவேயில்லை என்றும் தேமுதிகவினர் புகார் கூறியுள்ளனர். இதனால்தான் டெபாசிட் போகும் அளவுக்கு மோசமான தோல்வியை விஜயகாந்த் சந்தித்ததாக தேமுதிகவினர் புகார் கூறியுள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள்
பல மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், தேர்தலில் சிறப்பாக செயல்படவில்லையென்றும் விஜயகாந்திடம் புகார் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ம.ந.கட்டணி
இதனையடுத்து 20 ஆம் தேதிக்குப் பின்னர் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை மாற்றி விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியே வரும் முடிவை எடுப்பார் எனவும் தெரிகிறது.