ஏம்ப்பா பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம் விஜயகாந்த் திடீர் கேள்வி!
சென்னை: பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்ற ஆலோசனையில் கட்சியினருடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார்.
இந்த திடீர் யோசனைக்கு அவர் வந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த்தை இழுக்க பாஜகவினர் படு தீவிரமாக இறங்கியிருந்ததால் தேமுதிக இந்த மாதிரி யோசிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த யோசனையை இப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் தெரிவித்து ஆலோசனை நடத்தி வருகிறார் விஜயகாந்த்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கேள்வியைத்தான் முக்கியமாக வைத்துள்ளாராம் விஜயகாந்த்.
இன்றைய ஆலோசனையில்
இன்று சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களை சேர்ந்த அவைத்தலைவர், பொருளாளர், துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 320 பேர் கலந்து கொண்டனர்.
பலம் எப்படி
கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது மாவட்டங்களில் தே.மு.தி.க.வின் பலம் எப்படி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கலாமா?
பாஜக கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்..
அக்கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணி குறித்து நீங்கள் (நிர்வாகிகள்) என்ன நினைக்கிறீர்கள், மக்களின் கருத்து எப்படி உள்ளது என்ற விபரங்களை அவர் கேட்டறிந்தார்.
வாக்கு வங்கி ஓ.கே.வா...
கட்சியின் வாக்கு வங்கி எங்கெல்லாம் குறைவாக உள்ளது. அதற்கான காரணம் என்ன என்றும் கேட்டார். மேலும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை எப்படி உள்ளது, எங்கு குறைவான உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் கேட்டார்.
பால்விலை உயர்வுக்குக் கண்டனம்
ஆலோசனைக் கூட்டத்தில், பால்விலை உயர்வுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு இடையேதான் பால் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் போராட்ட அறிவிப்பும் வெளியானது.
ரஜினிகாந்த்
சமீப காலமாக பாஜகவினர், ரஜினி மீது முழுக் கவனத்தையும் திருப்பியுள்ளனர். அவரை எப்படியும் கட்சிக்குள் கொண்டு வந்து விடுவது என்று மும்முரமாக இருந்தனர்.
ரஜினி வழி தனி வழியாச்சே
ஆனால் தன் வழி தனி வழி என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும், ஆறுதலும் கூறி அவர் அறிக்கை விட பாஜக டென்ஷனாகி விட்டது.
விஜயகாந்த் வழியும் தனி வழியாய்ருமோ
பாஜகவினரின் இந்த ரஜினி மோகம் விஜயகாந்த்தை உசுப்பேற்றி விட்டதாக கூறுகிறார்கள். இனியும் பாஜகவுடன் இருக்க வேண்டாம் என்று அவர் கருதுகிறாராம். இதனால்தான் பாஜகவுடன் நீடிக்கலாமா, வேண்டாமா என்ற ஆலோசனைக்கு அவர் வந்துள்ளார் என்கிறார்கள்.