ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு விழாவாகும். தொன்று தொட்டு பல ஆண்டுகளாக தமிழர்களின் வீரத்தை பறைசாற்றவும், தமிழர்களின் கலாச்சார அடையாளமாகவும் ஜல்லி கட்டு வீர விளையாட்டு போற்றப்படுகிறது.
ஆனால் சில வருடங்களாக மிருகவதை தடுப்புச்சட்டம் என்பதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
பொங்கல் தினத்தன்று இதுபோன்ற வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதை அனைத்து மக்களும் விரும்புகின்றனர். எனவே மக்களின் உணர்வை மதித்தும், நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் வேர்களை கொண்டுள்ள இதுபோன்ற வீர விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உரிய பாதுகாப்பையும் தந்து, உரிய நெறிமுறைகளை வகுத்து, இந்த வீர விளையாட்டுக்களை நடத்த தமிழக அரசு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.