தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி விட்டது மத்திய அரசு.. விஜயகாந்த் பாய்ச்சல்
பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை பட்டியலில் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை பட்டியலில் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பொங்கல் விழாவிற்கு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றமும், பீட்டா அமைப்பும் தடை விதித்துள்ள நிலையில், அந்த விழாவை எப்படியாவது முறையாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றியாவது ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்பார்த்து தங்கள் ஆதங்கத்தை போராட்டங்கள் வாயிலாக அறவழியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வந்த மத்திய அரசின் செய்தி தமிழர்கள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது. மத்திய அரசு பொங்கல் தினத்தன்று விடுமுறையை ரத்து செய்துள்ளது, உரலுக்கு ஒருபுறம் இடி, மத்தளத்துக்கு இருபுறம் இடி என்பது போல் தமிழர்களின் கலாச்சார விழாவை கொச்சைபடுத்தும் அறிவிப்பாக தமிழர்கள் கருதுகின்றனர்.
எனவே பொங்கலுக்கு சில தினங்களே உள்ளதால் மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை, முக்கிய அறிவிப்பை மறு பரிசிலனை செய்து உடனடியாக விடுமுறை ரத்து என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். அத்துடன் மாநில அரசு அமைச்சரவையை கூட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பொங்கலுக்கு அரசு விடுமுறையுடன் ஜல்லிக்கட்டும் நடத்திட அவசர சட்டம் பிறப்பித்திட வேண்டும். வரப்போகும் தை பொங்கலை இனிய பொங்கலாக மாற்றி தமிழர்கள் அனைவருக்கும் பெருமையை சேர்த்திட வேண்டும்.
இந்த கருத்தை வலியுறுத்தி பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதி, தமிழர்களின் உணர்வுகளுக்காக கோரிக்கை வைத்துள்ளேன் என அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.