‘கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்’... 2–ம் இடம் பெற்ற மாணவர் விக்னேஷ்வரனின் லட்சியம்
ஈரோடு: பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் விக்னேஷ்வரனுக்கு கலெக்டராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் லட்சியமாம்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் விக்னேஷ்வரன் 1190 மார்க் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட அளவில் மாணவர் விக்னேஷ்வரன் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
மாணவர் விக்னேஷ்வரனின் தந்தை இளங்கோவன் பவானியில் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயார் பெயர் சண்முக பிரியா. விக்னேஷ்வரன் குடும்பத்தோடு பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையத்தில் வசித்து வருகிறார்.
பாராட்டு...
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாதனை படைத்த மாணவர் விக்னேஷ்வரை, பள்ளி நிறுவனர் சிவலிங்கம், தாளாளர் செல்வமணி சிவலிங்கம், நிர்வாக அலுவலர் நாட்ராயன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டினர்.
மகிழ்ச்சி...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் மாணவர் விக்னேஷ்வரன். அப்போது அவர் கூறுகையில், ‘பிளஸ்-2 தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி... நன்றி... நன்றி...
பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தி ஊக்கம் அளித்தனர். இதனால் தான் அதிக மார்க் பெற முடிந்தது. இந்த வெற்றிக்கு எனது பள்ளி நிர்வாகத்தினரும், எனது பெற்றோரும், ஆசிரியர்களும் தான் காரணம். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கலெக்டர் ஆகணும்....
இரவு நேரத்திலும் மற்றும் அதிகாலையிலேயே எழுந்து பாடங்களை படிப்பேன். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டராகி ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.