பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்
செல்போனில் இளம்பெண்களின் போட்டோக்களை வைத்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகரில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவியிடம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவர் விருதுநகரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் அக்கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளுக்கு போன் செய்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மறைமுகமாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த ஆடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவரை நேற்று கைது செய்யுமாறு கல்லூரி முன்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் புகாரின்பேரில் நிர்மலா தேவி நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இளம்பெண்களின் ஏராளமான புகைப்படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆனதை அடுத்து அவர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 28-ஆம் தேதி வரை அதாவது 12 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications