பொங்கலுக்கு கோவைக்குப் போனீங்கன்னா.. "விருமாண்டி" காளையைப் பார்தது ரசிக்கலாம்.. ஸ்பெஷல் அனுமதி!
கோவை: விருமாண்டி படத்தில் இடம்பெற்ற காளை கோவையில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் நரசிபுரம் கிராமத்தில் வெள்ளிங்கிரி கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் 1400 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 206 மாடுகள் ஜல்லிக்கட்டில் இடம்பெற்ற மாடுகள் ஆகும்.
கடந்த ஆண்டு அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த காரணத்தால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது காளைகளை விற்றனர். அப்போது கோவை வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகத்தினர் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காளைகளை மீட்டு வந்தனர்.

காளைகளை பார்வையிட ஏற்பாடு:
இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த வருடம் வெள்ளிங்கிரி கோசாலையில் வருகிற 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட கோசாலை நிர்வாகத்தினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

விருமாண்டி காளை:
குறிப்பாக இந்த கோசாலையில் விருமாண்டி படத்தில் நடிகர் கமலஹாசன் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு அடக்கும் காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சொந்த ஊர் மதுரை:
விருமாண்டி படத்தில் இடம்பெற்ற காளை மதுரை மாவட்டத்தை சேர்ந்தது. ஜல்லிக்கட்டில் பங்கு பெற்று வந்த காளையை கமலஹாசன் தனது படத்தில் இடம் பெற வைத்தார். அதன் மூலம் அந்த காளை பேரும், புகழும் பெற்றது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை அரசு தடை செய்ததும் அதன் உரிமையாளர் விரக்தியில் காளையை கறிக்கடைக்கு விற்று விட்டார்.

மீட்டு வந்த கோசாலை:
இதுகுறித்து வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிய வந்தது. உடனடியாக மதுரைக்கு சென்ற கோசாலை நிர்வாகத்தினர் கறிக்கடைக்காரர்களிடம் இருந்து ரூபாய்1.5 லட்சம் கொடுத்து இந்த காளையை மீட்டு வந்தனர். சுமார் 1000 கிலோ எடையுடன் 5 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த காளை மிகவும் ஆக்ரோஷத்துடன் எப்போதும் காட்சியளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications