ஒரு கணம் சிந்தித்து.. மனசாட்சிப்படி வாக்களியுங்கள்… எம்எல்ஏக்களுக்கு நடிகர் ஆனந்த் ராஜ் வேண்டுகோள்
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்கள் ஒரு கணம் சிந்தித்து மனசாட்சியோடு வாக்களியுங்கள் என்று நடிகர் ஆனந்த் ராஜ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சென்னை: நாளை கூட உள்ள சட்டசபையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மனசாட்சிப் படி ஆதரவளிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆனந்த் ராஜ் கூறியதாவது:
இப்போதுள்ள நிலையில் யார் உண்மையான அதிமுக என்று மக்கள் சொல்வார்கள். நாளைக்கு தேர்தல் வந்தால் மக்கள் யார் பக்கம் என்று சொல்வார்கள் அல்லவா? ஜெயலலிதா பெண்களுக்கு நிறைய இடம் கொடுத்தார். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதியை யாருக்கு தெரியும்? இன்றை அவர் அமைச்சர். அவர் மக்களுக்கு மதிப்பளித்தாரா என்று தெரியவில்லை.
என்னோடு அவரை ஸ்ரீரங்கத்திற்கு வரச் சொல்லுங்கள். அவர் தற்போது எடுத்திற்கும் முடிவிற்கு 10 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். 90 சதவீத மக்கள் எதிராக அவர் எடுத்திருக்கும் முடிவிற்கு எதிராக இருக்கிறார்கள்.
வெளிப்படையாகவே சவால் விடுகிறேன். வளர்மதி அவர்கள் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர். நான் தனி மனிதன். அவர் ஒரு இடைத் தேர்தலை சந்திப்பாரா என்று கேளுங்கள். தைரியம் இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வரட்டும். அப்படி வரும் தேர்தலில் சுயேச்சையாக நானும் நிற்கிறேன். அவரும் நிற்கட்டும். அவர் வெற்றி பெற மாட்டார். ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படி இருக்கிறது.
தேர்தலில் நிற்க வேண்டும். பதவியை அனுபவித்துவிட வேண்டும் என்ற சிறு சந்தோஷத்திற்காக அரசியல் அல்ல. நான் வணங்கி கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக நானும் வாக்குகளை கேட்டிருக்கிறேன். நாளை ஒரு தினம் ஒரு நிமிடம் சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களியுங்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள். இது என் அன்பு வேண்டுகோள் என்று அனந்த் ராஜ் கூறினார்.