வாக்காளர்களுக்குத் தர ஆம்புலன்சிலும், போலீஸ் ஜீப்பிலும் கடத்தப்படும் பணம்: வைகோ
விருதுநகர்: 108 ஆம்புலன்ஸ் மூலமும், போலீஸ் ஜீப் மூலமும் பணத்தை கொண்டு செல்கின்றனர் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
விருதுநகர் எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து நடந்து சென்று ஓட்டு சேகரித்தார். பின், மாரியம்மன் கோவில் முன், அவர் பேசியதாவது:
எல்லோருக்கும் நண்பன்
இந்த இடத்தில், 100க்கும் மேற்பட்ட முறை பேசி உள்ளேன்; 25 ஆண்டுகளாக, இங்குள்ள தெருக்களில் ஓட்டு கேட்டுள்ளேன். நான், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன். அனைவரையும் சமமாகக் கருதுபவன் நான். எல்லோருக்கும் நான் நண்பன்.
மோடி பிரதமராவார்
உணவு பாதுகாப்பு சட்டத்தால், இங்குள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி பிரதமரானால், இச்சட்டம் தூக்கி எறியப்படும். பா.ஜ.க, 272 இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் மோடி ஆட்சி அமைப்பார். தமிழகத்தில், பா.ஜ.க, கூட்டணி, 39 இடங்களிலும் வெற்றி பெற்றால், மீனவர், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க, மோடியுடன் பேசலாம்.
தொடர்ந்து போரடுகிறேன்
நான் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், அனைத்து தமிழருக்காகவும் குரல் கொடுப்பேன். விருதுநகரில் தொழில்களைக் காப்பாற்ற எம்.பி.யாக இருந்தபோதும், இல்லாதபோதும் தொடர்ந்து போராடி வருகிறேன். காமராஜர் மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தவன் நான். எங்கே தமிழனுக்குத் துன்பம் வந்தாலும் அதைத் தடுக்க போராடுவேன்.
வெள்ளமாக பாயும் பணம்
வாக்காளர்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். இந்தத் தேர்தலில் பணம் வெள்ளமாக வரப்போகிறது. அது உங்கள் பணம்தான். ரூ.1000 கோடிக்கு திட்டம் தீட்டினால் அதில் ரூ.200 கோடி கமிஷனாகப் போய்விடுகிறது.
108 ஆம்புலன்சில் பணம்
எனவே, அவர்களிடம் பணம் நிறைய உள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக போலீஸ் ஜீப்பிலும், 108 ஆம்புலன்சிலும் ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் பணம் கொண்டு செல்கின்றனர்.
நல்ல தீர்ப்பு தாருங்கள்
மதுவின் தாக்கத்தால், சிறுமியர் கற்பழிக்கப்படுகின்றனர்; பல குடும்பங்கள் துன்பப்படுகின்றன. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, 1,500 கி.மீ., நடந்தேன்.ஆனால் நான் நேர்மையானவன், நாணயமானவன். நீதிபதிகளாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்றார் வைகோ.