காந்தி பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு!
கோவை: வெளிநாடுகளில் பீர் பாட்டில்களில் இந்துக்கடவுள்களின் படங்களை போட்டு விற்பனை செய்தனர். இதையும் தாண்டி அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விற்பனை செய்தது.
இதற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு தமிழகத்தில் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி பீர் டின்
அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டது.
இந்தியாவில் கண்டனம்
அமெரிக்க நிறுவனத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனம் கிளம்பியது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது.
படம் அகற்றவில்லை
அதேசமயம் பீர் பாட்டிலில் காந்தி படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இணைய தளங்களில் இன்னும் காந்தி படத்துடன் கூடிய பீர் பாட்டில்களின் படங்கள் இடம் பெற்றுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளன.
பதிலுக்கு பதில்
இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்கா நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் கூடிய செருப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராமசுப்பிரமணியம்.
வழக்கு தொடர்ந்தாலும்
"அமெரிக்க பீர் நிறுவனம் காந்தியடிகளின் படத்தை பீர் பாட்டிலில் இருந்து அகற்றவில்லை. இது சம்பந்தமாக ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவரை இந்தியா கொண்டு வர நிறைய சட்ட நடைமுறைகள் உள்ளது.
ஜார்ஜ் வாஷிங்டன்
நம் நாட்டில் காந்தி போல அமெரிக்காவின் மதிப்பு மிக்க தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் அவரது படத்தினைப் போட்டு செருப்பு தயாரித்தால் என்ன என்று தோன்றியுள்ளது கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு. அதற்கு உடனடியாக செயல்வடிவமும் கொடுத்துவிட்டார்.
தயாராகிவரும் செருப்பு
இது சம்பந்தமா 5, 6 கம்பெனியை அணுகியும் யாரும் தயாரிக்க முன்வரவில்லையாம். ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பெயரை வெளியில் சொல்லாமல் செருப்பு தயாரித்துள்ளனர். அமெரிக்க அதிபர், துணை அதிபர், ஸ்பீக்கர்கள், 50 மாகாண கவர்னர், இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இந்த செருப்புகளை இந்த வார கடைசியில அனுப்பி வைக்க உள்ளனர்.
அமெரிக்க தூதரகம் முன்பு
இந்த செருப்பை பெரிய வடிவத்தில் தயாரிச்சு, ஒபாமா இந்தியா வர்ற 26ஆம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளாராம் ராமகிருஷ்ணன்.