பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்... தவறுகளை தட்டி கேட்க கூடாதா?: வைகோ
சென்னை: பாஜக கூட்டணியில்தான் மதிமுக இருக்கிறது, கூட்டணியில் இருக்கும் கட்சியின் சார்பில், அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட கூடாதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன.
மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆரம்பித்தது.
இதைத்தொடர்ந்து சமஸ்கிருத வார கொண்டாட்டம், குரு உத்ஸவ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மத்திய அரசு அறிவித்தபோதும், ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவின் டெல்லி வருகை, இலங்கையைச் சேர்ந்த புத்த துறவி அனகாரிகாவுக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது போன்ற நடவடிக்கைகளை வைகோ கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில், தமிழக 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த விவகாரத்தில் மோடிக்கு எதிராக வைகோ கடுமையாக பேசினார். இலங்கையுடனான உறவை பாஜக அரசு தொடர்ந்தால், எங்கள் உறவு அறுந்துவிடும் என எச்சரித்தார்.
இது பாஜக வினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, "மோடியை ஒருமையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை வைகோ முடிவு செய்துகொள்ள வேண்டும். மதிமுகவுக்கு வேறு இடம் கிடைத்துவிட்டது. அதனால்தான் வைகோ இப்படி பேசுகிறார்" என்றார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்துள்ள மதிமுகவினர், கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது.
பாஜக மீதான மதிமுக தொண்டர்களின் அதிருப்தி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எனவே, கூட்டணியில் நீடிக்கக்கூடாது என்று வைகோவிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்டது. மலேசியா சென்றுள்ள வைகோ தமிழகம் வந்ததும் இதுபற்றி முடிவெடுக்க உள்ளதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஜக கூட்டணியில்தான் மதிமுக இருக்கிறது என்று மலேசியாவில் இருந்து அறிவித்துள்ளார். தொலைக்கட்சி ஒன்றிற்கு மலேசியாவில் பேட்டியளித்த அவர், பாஜக அரசு, செயல்பாடுகளில் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் நாடகமாடுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.