நெடுவாசலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை திமுகவிற்கு இல்லை - ஸ்டாலின்
நெடுவாசல் போராட்டத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை திமுகவிற்கு இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நடைபெறும் பெறும் போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், ஜல்லிக்கட்டு பிரச்சினை, நெடுவாசலை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்று கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொட்டும் மழையில் போராட்டம் நைடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசலுக்கு நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்று பேசினார். தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார்.
மத்திய அரசு உறுதி
போராட்டக்களத்தில் பேசிய ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த கோரி திமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் முறையிட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி மொழி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மாநில அரசு நடவடிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கூறிய ஸ்டாலின், தமிழக அரசு சிறப்பு சட்டசபைக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார். மாநில அரசின் நடவடிக்கைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றார்.
திமுக துணை நிற்கும்
நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று கூறிய ஸ்டாலின், போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தானும் பங்கேற்பேன் என்றார். அமைச்சர்களுக்கு சிறையில் உள்ள சசிகலா உடன் ஆலோசனை நடத்தவே நேரம் சரியாக இருக்கிறது என்று கூறினார்.
அரசியலாக்க மாட்டோம்
திமுக எதையும் அரசியலாக்காது என்று கூறிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களை வைத்து திமுக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.