செஞ்சோம், செஞ்சோம், இதை எல்லாம் நாங்க தான் செஞ்சோம்: பெரிய்ய்ய பட்டியலிட்ட ஜெயலலிதா
சென்னை: சட்டசபையில் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை 110-விதி கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். 9 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் ஏற்கனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் மூன்று துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.
உழவர் பெருவிழா
உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்கள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடமாடும் விரிவாக்க மையங்களாக நடத்தப்பட்டுள்ளன. விழிப்புணர்வு முகாம்களில் 5.60 லட்சம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 2.98 லட்சம் ஒருங்கிணைந்த கையேடுகள் மற்றும் 5.54 லட்சம் தொழில்நுட்ப வழிகாட்டி கையேடுகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. மேலும், 29.79 கோடி ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
வேளாண் பொருட்கள்
பாரம்பரிய வேளாண் பொருட்களான இளநீர், சிகைக்காய், பருத்தி மற்றும் சிறுதானியங்களின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை மக்களிடையே பரவலாக்கம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள 385 வட்டாரங்களிலும் தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளன. தரிசு நிலங்களை சீர்திருத்தி உரிய நீராதார அமைப்புகளையும் உருவாக்கும் வகையில், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 9,775 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கரும்பு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், நீடித்த நிலையான கரும்பு உற்பத்தித்திட்டம் 19,854 ஹெக்டேர் பரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. "சிறப்பு நோக்க அமைப்பு" ஒன்று, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையரகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு வணிக வளாகம்
பொள்ளாச்சியில் இளநீருக்கான சிறப்பு வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வாழைக்கென சிறப்பு வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வேளாண் கல்லூரி
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் ஆகிய இடங்களில் 3 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 10 மாவட்டங்களில், "வேளாண் பதப்படுத்தும் மாதிரி தொழிற்சாலை" அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
மாதிரி கிராமங்கள்
வேலூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம், 5 மாதிரி இயற்கைக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கோடு 150 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 புதிய திரவ உயிர் உரஉற்பத்தி ஆய்வகங்களும், அங்கக உரங்களின் சத்துக்களை ஆய்வு செய்வதற்கு 2 புதிய ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இயற்கை பண்ணையத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மானியம்
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களுக்கு உற்பத்தி மானியம் மற்றும் வினியோக மானியமாக 19 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பசுமைக் குடில் அமைத்தல், நிழல் வலைக்குடில்கள் அமைத்தல் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்சாகுபடி முறைகளில் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்க முடியும் என்பதால், இத்தகைய தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும், நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு மானியமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 100 முன்னோடி விவசாயிகளுக்கு, தோட்டக்கலைப் பயிர்களில் நன்கு முன்னேறியுள்ள வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 6,880 விவசாயிகள் உள்நாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காய்கறி சாகுபடி
காய்கறி சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள் அடங்கிய "நீங்களே செய்து பாருங்கள் தளைகளை", நகர்ப்புற மக்களுக்கு வினியோகிக்கும் திட்டத்தை திருச்சி மற்றும் மதுரை மாநகர மக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியருக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தங்கும் விடுதிகள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்ணைய திட்டம்
மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிடவும், பயிர்களின் உற்பத்தித் திறனை உயர்த்திடவும், கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்புடன் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் 10,271 ஹெக்டேர் பரப்பளவிலும், தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் 1,957 ஹெக்டேர் பரப்பளவிலும், பசுமைக்குடில் அமைக்கும் பணி 29,400 சதுர மீட்டர் பரப்பளவிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அங்கன்வாடி மையங்கள்
9,102 அங்கன்வாடி மையங்களிலுள்ள சிறிய பழுதுகளும் பிற அங்கன்வாடி மையங்களில் உள்ள பெரிய பழுதுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. ரூ.23.78 கோடி செலவில் 13,984 மையங்களில் குழந்தை நேய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 27.21 கோடி ரூபாய் செலவில் 20,558 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் 10,647 பணியிடங்களும் அங்கன்வாடி மையங்களில் 10,694 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
குழந்தைகள்
5,000 அங்கன்வாடி மையங்களுக்கு, 3.20 கோடி ரூபாய் செலவில் எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் பிரஷர் குக்கர் ஆகியவை வழங்கப்பட்டு
நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள 2,01,032 அங்கன்வாடி குழந்தைகளுக்கு 4.30 கோடி ரூபாய் செலவில் இரண்டு வண்ண உடைகள் 2012-2013-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
திருமண உதவித் தொகை
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட, 196 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக 60.50 லட்சம் மற்றும் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 784 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் முதிர்வுத் தொகையினை, அப்பயனாளிகள் 18 வயது நிறைவு செய்தவுடன், அவர்களது உயர் கல்விக்கு பயன்படுத்தப்படும் வகையில், 20,322 பயனாளிகளுக்கு 15.55 கோடி ரூபாய் முதிர்வுத் தொகையாக விடுவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தாய்மார்கள்
கோவை, திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 1 விடுதி வீதம் 11 பணி புரியும் மகளிர் விடுதிகளும், சென்னையில் 6 பணி புரியும் மகளிர் விடுதிகளும், காஞ்சீபுரத்தில் 3 பணி புரியும் மகளிர் விடுதிகளும் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பணிக்கு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 2.31 கோடி ரூபாய் செலவில் 211 மழலையர் பராமரிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஓய்வூதியம்
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கும், சத்துணவுப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் திரல் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டும் குறு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், அங்கன்வாடி சமையலர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் திரல் தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை பெறுவதற்கான குறைபாட்டின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக்குறைக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள்
அரசு பேருந்துகளை இயக்குகின்ற 45 வயதிற்கு மேற்பட்ட 21,885 ஓட்டுனர்களுக்கு "முழு உடல் பரிசோதனை'' செய்யப்பட்டுள்ளன. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 393 வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையான 47 கோடியே 71 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. 4,688 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையான 96 கோடியே 57 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர்கள்
31.3.2013 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணியிடங்களை உள்ளடக்கி, மொத்தம் 16,661 பணியிடங்கள் மே மாதம் 2013-ல் நிரப்பப்பட்டுள்ளன. 4,511 பதிலி ஓட்டுனர்கள், 4,558 பதிலி நடத்துனர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலி பணியாளர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 214 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
சென்னை
சென்னை பெருநகரத்தில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 134-லிருந்து 200-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 1,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழங்காமையால், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்காக 38 கோடியே 91 லட்சம் ரூபாயை வழிவகை முன்பணமாக வழங்கி, ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வழித் தடங்களில் புதியதாக 110 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள்
பேருந்துகளில், 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில், குளிர்சாதன வசதி பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2,22,034 முதியோர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பயண டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.