திமுக- பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததா?: வானதி சீனிவாசன் சிறப்புப் பேட்டி
-ஜெயலட்சுமி
நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சியினரை அரவணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளாட்டும். மீனவர்களுக்கான போராட்டமாகட்டும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் பேச்சே தனி பாணிதான்.
சென்னையில் சுனாமி குடியிருப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து நடுரோட்டில் மீன் குழம்பு சமைத்து போராட்டம் நடத்தியவர்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், நாடாளுமன்ற தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். பிஸியான நேரத்திற்கு இடையே ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி
பாஜக வெல்லும்…
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
வானதி சீனிவாசன்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை பாரதீய ஜனதா கட்சியை புறக்கணித்துவிட முடியாது. கடந்த கால தேர்தல்களில் ஒரு சில தொகுதியில் போட்டியிட்டவர்கள் மட்டுமெ வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போதும் மோடி அவர்களுக்கு கூடிய கூட்டத்தினை பார்க்கும் போதும் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வீடுதோறும் மோடி…
கேள்வி: நீங்கள் மேற்கொண்ட வீடுகள் தோறும் மோடி கிராம பாத யாத்திரையின் முதன்மை நோக்கம்..
வானதி சீனிவாசன்: நரேந்திர மோடி அவர்களை தமிழகந்தோறும் ஒவ்வொரு வீடுகளிலும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கட்சிப் பணிகள் அதிகரிப்பு
கேள்வி: மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்..இரண்டுக்கும் அப்படி என்ன வேறுபாடு?
வானதி சீனிவாசன்: தமிழக பாஜகவில் மொத்தம் 8 மாநிலச் செயலாளர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவராக நான் இருந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மாநாகரத்தில் உள்ள வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும், மகளிர் அணியில் பொறுப்பாளராகவும் இருக்கிறேன். இப்போது மாநில பொதுச் செயலாளராக 4 பேரில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். பொறுப்பு கொஞ்சம் அதிகரித்துள்ளது.
ஹெச்.ராஜாவின் கருத்து…
கேள்வி: பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசியது பற்றி..
வானதி சீனிவாசன்: நிச்சயம் அவர் அப்படி ஒரு கருத்தை கூறியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஹெச்.ராஜா அப்படி சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை.
தொண்டர்கள் கூட்டம்
கேள்வி: மோடியின் திருச்சி கூட்டத்தை ஒப்பிடுகையில் கூட்டணி கட்சி தொண்டர்கள் வந்த நிலையிலும் வண்டலூரில் கூட்டம் குறைந்து இருந்ததே?
வானதி சீனிவாசன்: திருச்சி இளந்தாமரை மாநாட்டிற்கும் சரி, வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் சரி, இரண்டிற்கும் ஒரே மாதிரியான கூட்டம்தான் வந்தது. வண்டலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மிகப்பெரிய இடம் என்பதால் பார்த்தவர்களுக்கு கூட்டம் குறைவாக தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
இல.கணேசன் கருத்து…
கேள்வி: ஸ்பெக்ட்ரம் டேப் விவகாரத்தில் "ஒருவர் பேசும் பேச்சை அவர் அறியாமல் ஒட்டு கேட்பதும் பதிவு செய்வதும் எந்த வகை நியாயம்?" என்று திமுகவுக்கு ஆதரவாக இல. கணேசன் கருத்து தெரிவித்திருந்தாரே?
வானதி சீனிவாசன்: திமுகவிற்கு ஆதரவாக இல. கணேசன் கருத்து சொல்லவில்லை. அரசாங்கம் தொடர்பான விவகாரத்தில்... நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவ நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் அனுமதியோடு ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது, உடையாடல்களை பதிவு செய்தவது தவறில்லை. அதே சமயம், ஆளுங்கட்சியாக இருப்பவர்கள், தனிப்பட்ட நபர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது தவறு என்ற அடிப்படையில்தான் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதன் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படாதவரை பரபரப்பிற்காக இந்த பேச்சுக்களை வெளியிடுவது சரிசமமில்லை என்றுதான் இல.கணேசன் கூறியுள்ளார். இது திமுகவிற்கு ஆதரவான கருத்தாக எனக்கு தெரியவில்லை.
தனி ஈழம் அமைய…
கேள்வி: ஈழப் பிரச்சினையில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லையே ஏன்...தமிழ் ஈழம் அமைவதை பாஜக ஆதரிக்குமா?
வானதி சீனிவாசன்: இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு அவசியமான, முக்கியமான ஒன்று. ஒருங்கிணைந்த இலங்கையில் வாழும் தமிழக மக்களுக்குத் தேவையானவற்றை செய்யவேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தும் பட்சத்தில் தனி ஈழத்திற்காக பாஜக ஆதரவு கொடுக்கும். தனி ஈழம் அமைவது இலங்கை அரசாங்கத்தின் கைகளில்தான் இருக்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா அவர்களே கூறியிருக்கிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
கேள்வி: திமுக- பாஜக இடையே கூட்டணி பற்றி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
வானதி சீனிவாசன்: இல்லை அப்படி எதுவும் நடைபெறவில்லை....
கேள்வி: பாஜக அணியில் தேமுதிக வர வாய்ப்புள்ளதா?
வானதி சீனிவாசன்: தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. எங்களுடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்று எங்கள் மாநிலத் தலைவரே பேட்டியளித்திருக்கிறாரே?
நரேந்திரமோடி தலைமையில்
கேள்வி: பாஜக கூட்டணியில் தேமுதிக வராவிட்டால் உங்களது திட்டம் என்ன?
வானதி சீனிவாசன்: நரேந்திரமோடி தலைமையை ஏற்றுக் கொண்டு எங்களோடு கூட்டணிக்கு வருபவர்களை அரவணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
தேர்தலில் போட்டி
கேள்வி: 2011 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
வானதி சீனிவாசன்: கட்சித் தலைமை கட்டளையிட்டால் கண்டிப்பாக போட்டியிடுவேன். அதை நான் மறுக்க மாட்டேன்.
ஜெயலலிதாவிற்கு ஆதரவு
கேள்வி: மோடிக்குப் பிரதமர் வாய்ப்பு அமையாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக பாஜக ஆதரவு தருமா?
வானதி சீனிவாசன்: அது டெல்லியில் உள்ள தலைவர்கள் எடுக்கவேண்டிய முடிவு. மாநில பொதுச்செயலாளரான நான் ஏதும் சொல்ல முடியாது.