பணப்பட்டுவாடா புகார்.. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கண்காணிப்பு தீவிரம்.. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 256 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தில் பரபரப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் தேர்தல் துணை ஆணையர் சென்னை வந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பு
மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் செலவினப் பார்வையாளர், பொதுப்பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் மற்றும் 2 சிறப்புப் பார்வையாளர்களும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவும் பங்கேற்றனர்.
விவாதம் என்ன?
தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா முயற்சிகளை தடுப்பது, வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள்
இதனைத் தொடர்ந்து துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, மாலை 4 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலை நேர்மையாக நடத்து தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
வெப் கேமரா
இதனைத் தொடர்ந்து துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பணப்பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே. நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வாக்குப் பதிவு நடைபெறும் 256 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொறுத்தப்பட உள்ளது.
செலவினங்கள் கண்காணிப்பு
மேலும், வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் ஐந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் துணைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
நுண் பார்வையாளர்கள்
இதுதவிர, 256 வாக்குச்சவாடி மையங்களிலும் நுண் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என உமேஷ் சின்ஹா அறிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா பெருமளவில் நடைபெறுவதை கட்டுப்படுத்த பர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.