புதிய ஆளுநர் பன்வாரிலால் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்னென்ன?
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன என பார்க்கலாம்.
தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழலில் ஆளுநர் ஜனநாயக முறையில் முடிவு எடுக்காததே குளறுபடிகளுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் இந்த இழுத்தடிப்பிற்காகவே மத்திய அரசு முழு நேர ஆளுநரை நியமிக்காமல் அரசியல் சதுரங்கம் ஆடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார். அஸாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே அவர் முன் இருக்கும் சவால்களை
பன்வாரிலால் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று மக்களும், அரசியல் தலைவர்களும் உற்று நோக்கி வருகின்றனர்.
ஆதரவு வாபஸ் பெற்ற விவகாரம்
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 18 எம்எல்ஏக்கள் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்த போது, அதன் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதன் மீது புதிய ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
Recommended Video
நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே
இதே போன்று எதிர்க்கட்சியான திமுக சார்பில் முந்தைய பொறுப்பு ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர். அந்த மனு மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்டே ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
நெருக்கடி ஏற்படுத்துமா?
அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாகவும் இது குறித்தும் ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. எனவே அவ்வாறு புகார் மனு அளிக்கப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தம் ஆளுநருக்கு உள்ளது.
துணைவேந்தர் நியமனம்
அரசியல் பிரச்னைகள் தவிர பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாத நிலையில் அதற்கான பணிகளை கவனிக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது.