டெய்லி நியூஸ்ல சொல்றாங்களே.. "மேலடுக்கு சுழற்சி".. அப்படீன்னா என்ன தெரியுமா?
சென்னை: மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. இந்த வார்த்தைகளையெல்லாம் நாம் அடிக்கடி வானிலை அறிவிப்புகளில் கேட்டுள்ளோம். ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாமா...
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அது மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நமது தீப கற்பத்தை விட்டு நகர்ந்து செல்வதால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஒரு புதிய மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்க கடலில் உதயமாகி உள்ளது. இதனால் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி, நமக்கு மழை பெய்வதற்குக் காரணமாகக் கூறப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் மேலடுக்கு சுழற்சி என்றால் என்ன தெரியுமா?
மேலடுக்கு சுழற்சி:
பொதுவாக கடல் மட்டத்தில் உருவாகும் சுழற்சியானது, காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அப்பக்கம் மழையாக நகர்ந்து செல்லும். இது காற்றழுத்த தாழ்வுநிலை எனப்படும். இதுவே அடுத்தடுத்து வலுவானதாக மாறும் போது, அதன் அளவைப் பொறுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த மண்டலம் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்த சுழற்சியானது கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேலே, அதாவது 300 மீட்டருக்கு மேலே உருவாகும் போது, அது மேலடுக்கு சுழற்சி எனக் கூறப்படுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானது காற்று வீசும் திசையில் நகர்ந்து சென்று மழை கொடுக்கும்.