வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் விபத்துகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விபத்துகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
1. மழைநீரில் நனைந்த மின் உபகரணங்கள் அதாவது குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்த பின்பு அருகில் உள்ள எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
2. ஈரமான மின் அளவிகள் உள்ள பலகைகள், சுவிட்சுகள் மற்றும் மின்ஒயர்களை தொடக்கூடாது.
3. தண்ணீர் வடிந்த பிறகு மின்ஒயர்கள் செல்லும் மின்பாதைகளை எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதிக்க வேண்டும்.
4. நீரில் நனைந்த மின்ஒயர்கள் செல்லும் ஒயரிங்கிள் மின்கசிவு இருந்தால், ஈரமான சுவர்களை தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்சை
ஆப் செய்து, எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக சரி பார்க்க வேண்டும்.
5. மின்கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெருவிளக்கு மின்கம்பங்கள் ஆகியவற்றை தொடக் கூடாது.
6. மின்கம்பி அல்லது ஒயர்களின் மீது ஈரத்துணி உலர்த்த பயன்படுத்த வேண்டாம்.
7. மின்கம்பங்களில் துணிகளையோ, கம்பிகளையோ அல்லது வளர்ப்பு பிராணிகளை கட்ட வேண்டாம்.
8. மின்கடத்திகள் அல்லது மின்கம்பிகள் அறுந்து கிடந்ததை கவனித்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
9. மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.