அன்று பினராயி விஜயன்... இன்று நல்லக்கண்ணு... கமலின் அரசியல் வியூகம் என்ன?
கமல் அரசியலுக்கு வருவது என முடிவு எடுத்த பிறகு அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வருகிறார்.
Recommended Video
சென்னை: கமல் தமிழகத்தின் அரசியல் குறித்து பேச தொடங்கிய குறுகிய காலத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். இன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்துள்ளார். தொடர்ந்து இடதுசாரி தலைவர்களை சந்தித்து வரும் கமல்ஹாசனின் அரசியல் வியூகம்தான் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.
கடந்த சில மாதங்களாக தமிழக ஆட்சியாளர்களை பகிரங்கமாக எதிர்த்து விமர்சனம் செய்தவர் கமல்ஹாசன். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறி ஆட்சியாளர்களின் ரத்த கொதிப்பை உயர்த்தினார்.
நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு அரசின் செயல்பாடு குறித்தும் தனக்கே உரிய நடையில் விமர்சனம் செய்துள்ளார். அரசியலுக்கு வர போகிறார்களா என்று கமலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு வயதுக்கு வந்தபோதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.
தான் ஒரு மலையாளி
சிவாஜி கணேசனுக்கு பிறகு, செவாலியே விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனை முதல்வர் ஜெயலலிதா பாராட்டவில்லை. ஆனால் கேரளா முதல்வர் பினராயி விஜயனோ தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதற்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறிவிட்டு, தான் ஒரு மலையாளி என்றும் தனது முதல்வர் பினராயி விஜயன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஓராண்டுக்கு பாராட்டு
கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் பொறுப்பேற்று ஓராண்டு ஆனதை முன்னிட்டு கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அவரை கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி ஓணம் பண்டிகையை யொட்டி அவரது வீட்டில் கமல் சந்தித்து பேசினார். அப்போது கமல் கூறுகையில் தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் இதை ஒரு அரசியல் சுற்றுலா போலவும் மேற்கொண்டுள்ளேன். இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
கமல் சந்திப்பு
இன்று சென்னை திநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணுவை கமல் சந்தித்து பேசினார். அப்போது நல்லக்கண்ணு நேர்மையான தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன். மேலும் மக்கள் நலனில் அக்கறையுடைய ஆதர்ஷ தலைவர்களில் நல்லக்கண்ணுவும் ஒருவர் என்று கூறியிருந்தார்.
வியூகம் என்ன?
கமல்ஹாசன் இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால்தான் அவர் இடதுசாரி தலைவர்களை சந்தித்து வருகிறார் என்ற கருத்து பரவலாக இருந்தது. எனினும் இடதுசாரிகள் தவிர்த்து மற்ற தலைவர்களையும் சந்திப்பேன் என்று கமல் கூறியதை பார்க்கும் போது லஞ்ச புகார்களில் சிக்காத தலைவர்களையும் பழுத்த அரசியல்வாதிகளையும், ஜாதி ரீதியில் கட்சியை முன்னெடுத்து செல்லாத தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்றே தெரிகிறது. இதுதான் ஆண்டவரின் வியூகமோ?