சசி பெங்களூரு சிறையில்... தினகரன் டெல்லி சிறையில்… அதிமுகவில் மன்னார்குடி குடும்பத்தின் நிலை என்ன?
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
லஞ்சம்
சுகேஷிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். கடந்த 17ஆம் சிக்கிய சுகேஷ் மேலும் இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல்
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருந்து தினகரனுக்கு பிரச்சனை உச்சமடைந்தது.
கைது
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்தனா ஆகியோரிடம் 4 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் சசிகலா
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா உடல் நலமின்றி மறைந்தார். அவர் மறைந்த உடன் சசிகலாதான் அதிமுக என்ற ஒரு நிலை உருவானது. அவர் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்பதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, சொத்துக் குவிப்பு வழக்கில் அவசர அவசரமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பர அக்ரகாரா சிறையில் தள்ளப்பட்டார்.
டெல்லியில் தினகரன்
அவர் சிறைக்கு செல்வதற்கு முன், அவரது உறவினரான டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார். இதனைத் தொடர்ந்து, தினகரன்தான் அதிமுகவை வழி நடத்தி செல்பவர் என்ற நிலை உருவானது. இதற்கும் பெரிய ஆப்பு இன்று வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீசார் தினகரனை கைது செய்துள்ளது.
குடும்பம் மிஞ்சுமா?
இது முழுக்க முழுக்க பாஜகவின் பின்னணியில் நடக்கும் நாடகம் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக விமர்சனம் எழுந்திருந்திருக்கிறது. எனினும் , சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே இப்போதைக்கு நிதர்சனமாக உள்ளது.