சுவாதி கொலையாளி என வாட்ஸ்அப்பில் வைரலாவது சிறையில் உள்ள பிலால் மாலிக் போட்டோ! அதிர்ச்சி தகவல்
சென்னை: சுவாதியை கொன்ற கொலையாளி எனக்கூறி நேற்று முதல் வாட்ஸ்அப்பில் பிலால் மாலிக் என்பவரது படம் தீயாய் பரவி வருகிறது. கொலையாளியை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று கூறி பரப்பப்படும் அந்த வாட்ஸ்அப் தகவல் குறித்து சென்னை காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இன்போசிஸ் ஊழியர் சுவாதி, அடையாளம் தெரியாத வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே ரயில் நிலையம் அருகேயுள்ள வீடு மற்றும் கடை ஆகியவற்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான கொலையாளியின் சற்று தெளிவான உருவப்படம் நேற்று வெளியிடப்பட்டது.

நேற்று வெளியானது
கொலையாளியை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டது. அந்த படம், நமது தளத்தில் நேற்றே வெளியிடப்பட்ட நிலையில், இன்றைய செய்தித்தாள்களிலும் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் மெசேஜ்
இந்நிலையில் நேற்று மாலை முதல் வாட்ஸ்அப்பில் ஒருவர் படத்தை போட்டு இவர்தான் சுவாதி கொலையாளி என்றும், அவரை பிடித்து கொடுத்து உதவும்படியும் கோரிக்கைவிடுத்து ஒரு மெசேஜ் தீயாய் பரவி வருகிறது. போலீஸ் வெளியிட்ட படத்தில் இருந்து இது மாறுபட்டதாக இருந்தது.

தீவிர பரவல்
சுவாதி கொலை சம்பவம் தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால், இந்த மெசேஜை பார்வேர்ட் செய்வதில் தனிப்பட்ட நபர்களும், வாட்ஸ்அப் குரூப் மெம்பர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் மெசேஜ் அதி விரைவில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

சமூக தளங்கள்
இந்த படத்தை பேஸ்புக் உள்ளிட்ட தளங்களிலும் பொதுமக்கள் பதிவேற்றம் செய்து, கொலையாளியை கண்டுபிடியுங்கள் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பழைய குற்றவாளி
இதுகுறித்து காவல்துறையில் விசாரித்தபோது, கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமானது. அந்த போட்டோவில் இருப்பவரது பெயர் பிலால் மாலிக். இவர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர், தற்போது மத்திய சிறையில் உள்ளார். அத்வானி ரத யாத்திரை செல்லும் பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் இவருக்கு தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிலால் மாலிக்
பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதின் ஆகிய சமூக விரோதிகளுடன் சேர்த்து பிலால் மாலிக்கும் கைது செய்யப்பட்டிருந்தார். இவரது படத்தைதான் பெயரை குறிப்பிடாமல் பரப்பியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒய்.ஜி.மகேந்திரன்
பிலால் மாலிக் என்பவர்தான் சுவாதியை கொலை செய்தார் என்று ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவியது. ஒய்.ஜி.மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு விமர்சனத்திற்கு உள்ளாகிய பிறகு அந்த தகவலை நீக்கினார்.

கைது இல்லை
இதனிடையே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், சுவாதி கொலை வழக்கு முக்கியமான வழக்காகும். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. தயவு செய்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications