ஜெயலலிதாவுக்கு நட்புக்கரம் நீட்டிய ராகுல்காந்தி... இருவரும் சந்தித்ததே இல்லையாம்!
சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என்று டெல்லியில் இருந்து வந்து அதிமுக தொண்டர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்லி விட்டு போயிருக்கிறார் ராகுல்காந்தி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
கடந்த 2 வாரத்திற்கும் மேலாக உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை பிரபல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசியல் பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு செல்கின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே பிரதமர் மோடி பூங்கொத்தும் கடிதமும் அனுப்பியிருந்தார்.
ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வரும் பிரதமர் மோடி சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. யாருமே எதிர்பார்க்கதது ராகுல் காந்தியின் வருகை.
நட்புக்கரம்
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சந்திக்க வந்த ராகுல், இத்தருணத்தில் நானும், காங்கிரஸ் கட்சியும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருப்போம், என் தாயாரின் ஆதரவை தெரிவிக்க வந்தேன் என்று கூறிய ராகுலின் வார்த்தைகளும் அரசியல் அரங்கில் வெவ்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
அரசியல் கணக்கு
அரசியலில் எதுவும் நடக்கலாம். என்று பேசுவர்களுக்கு மத்தியில் இது கூட்டணி கணக்கு இல்லை. அதற்கும் அப்பால் எழுந்த ஒரு அரசியல் பண்பு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டு சென்றிருக்கிறார் ராகுல் காந்தி. அதை அனைவரும் புரிந்துகொண்டால் அரசியல்தளம் இன்னும் ஆரோக்கியமாக அமையும்.
சந்தித்ததே இல்லை
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தியும், மூத்தத் தலைவரும் முதல்வருமான ஜெயலலிதாவும் சம கால அரசியலில் இருந்தாலும் இதுவரை இருவரும் எங்கும் எப்போதும் நேரடியாக சந்தித்ததே இல்லை என்கின்றனர்.
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் - அதிமுக கூட்டணி தமிழகத்தில் 1977இல் உருவானது. அதன் பிறகு 1984, 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் இந்த கூட்டணி சிறு சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தது. ஆனால் கூட்டணி அரசியல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பிணைப்பு இந்த இரு கட்சிகளிடமும் இருந்து வருவது பல்வேறு தருணங்களில் பொதுவெளியில் ஊர்ஜிதமாகியிருக்கிறது.
இந்திராவின் வருகை
எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதித்து, இதே அப்பல்லோ மருத்துவமனையில் 1984ம் ஆண்டு சிகிச்சை பெற்றபோது இந்திராகாந்தி நேரில் வந்து உடல்நலம் விசாரித்து சென்றார். பின்னர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறவும் உதவினார்.
ராஜீவ்காந்தியின் வருகை
1988இல் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த ஜெயலலிதா, தேவகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது ஜெயலலிதாவை பார்த்து உடல்நலம் விசாரிக்க ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்தார்.
ஜெ., - ராஜீவ் நட்பு
1984ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் ஜெயலலிதா. தமிழக அரசியலில் ஜெயலலிதா களமிறங்கிய போது கூட்டணிக்கரம் நீட்டியவர் ராஜீவ்காந்தி. இருவருக்கும் இடையே சில ஆண்டுகள் மட்டுமே வயது வித்தியாசம் இருந்தது.
ராகுல்காந்தி வருகை
ஜெயலலிதாவும், ராகுல்காந்தியும் சமகாலத்தவர்களாக இருந்தபோதிலும் வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்தவர்கள். கூட்டணிகளைக் கடந்து உருவாகும் அரசியல் நட்பே சிறந்தது என்பதற்கு சான்றாக உள்ளது ராகுலின் வருகை! ஆயிரம் அரசியல் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும் ராகுல் ஒரு நல்ல மரபை தொடங்கி வைக்கிறார். துன்பம் நேர்கையில் ஆதரவுக்கரம் கொடுப்பதுதான் ஆரோக்கியமான அரசியல் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் இப்போது கூட்டணியில் உள்ள திமுகவினருக்கும் சில விசயங்களை சொல்லாமல் புரிய வைத்து சென்றுவிட்டார் ராகுல் காந்தி