மெல்லிசான அந்த கோடு.. இவ்வளவுதாங்க ரஜினிகாந்த்துக்கும், விஜயகாந்த்துக்கும் உள்ள வித்தியாசம்!
Recommended Video
சென்னை: விஜயகாந்த் பிரஸ் மீட்டில் காட்டிய கோபத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த் காட்டிய கோபத்திற்கு கிடைக்கவில்லையே என்பதை அறிந்து கொண்டால், மக்களிடம் இருந்து தான் எவ்வளவு தூரம் அன்னியப்பட்டு நிற்கிறோம் என்பதை உச்ச நட்சத்திரத்தால் உணர முடியும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீசாரால் தாக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொல்லி கிளம்பினார் ரஜினிகாந்த். காலையில் யார் முகத்தில் முழித்தாரோ தெரியவில்லை, ஆரம்பம் முதல் சென்னை திரும்பும் வரை அவரது பேச்சுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சையிலேயே முடிந்தன.
40 வருடகாலமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கோலோச்சி வரும் ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று பாடல் வரிகளுக்கு நடனமாடிய ஒருவரை பார்த்தே, "யார் நீங்க" என்ற கேள்வியை தூத்துக்குடியில் உள்ள இளைஞர் ஒருவர் எழுப்புவார் என்பதை ரஜினி சிந்தித்தும் பார்த்திருக்க மாட்டார்.
தொடர் கோபம்
இந்த கோபம், தூத்துக்குடி பிரஸ் மீட்டில் எதிரொலித்தது. அதைவிட அதிகமாக சென்னையில் எதிரொலித்தது. பத்திரிகையாளர்கள் இரு கேள்விகள் கேட்டதற்கே 'யே' என்று சத்தம் போட்டார் ரஜினிகாந்த். வேற கேள்வி இருக்கிறதா என முகத்தை கோபத்தோடு வைத்துக் கொண்டு கேட்டார். எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று அவர் கூறியது இதன் உச்சம்.
ஆபத்தான பேச்சு
தமிழகம் சுடுகாடாகிவிட கூடாது என்பதே, போராட்டத்திற்கு காரணம் என்பதை ரஜினிகாந்த் உணராமல் பேசியதாக ஒரு சிலர் கூறினாலும், ரஜினிகாந்த்தின் பேச்சின் மற்றொரு கோணம் மிக ஆபத்தானது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்கிறார் என்றால், அத்தனை பிணங்கள் விழும் என்பதே இதன் உள்ளர்த்தமா என்ற கேள்வி எழுகிறது? போராட்டம் நடத்தினால் போலீஸ் சுட்டு தள்ளும் என்பதை வேறு மாதிரி சொல்கிறாரா என்கிறார்கள் நெட்டிசன்கள். ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த போதிலும் கூட, அதை எளிதாக கடந்து சென்று, "எதற்கெடுத்தாலுமா முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கேட்டவர் அவர்.
விஜயகாந்த் பிரஸ் மீட்கள்
இதனால்தான் ரஜினிகாந்த்தின் பிரஸ் மீட் கடும் விமர்சனங்களை இணையத்தில் கிளப்பியுள்ளது. ஆனால் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். விஜயகாந்த்தும் பல பிரஸ் மீட்களில் கோபப்பட்டவர்தான். ஆனால், அவரது கோபம் ஜெயலலிதா ஆட்சி மீதுதான் இருந்தது. அதை தட்டிக்கேட்காத சில ஊடகங்களை சுட்டிக்காட்டிதான் அவர் கோபப்பட்டார். மிக கடுமையான வார்த்தைகளை விஜயகாந்த் பயன்படுத்தினாலும்கூட, அதை பெருவாரியான மக்கள் தப்பாக நினைக்கவில்லை. அறச்சீற்றமாகவே அதை பார்த்தனர்.
அதிகார வெளிப்பாடு
ஆனால், சினிமாத்துறையில், அவரின் சீனியரும், அரசியலில் ஜூனியருமான ரஜினிகாந்த் கோபமோ, ஆங்காரமாக பார்க்கப்படுகிறது. அதிகார தோரணையின் வெளிப்பாடாக அது விளிக்கப்படுகிறது. ஆட்சியில் உள்ளோரின் அடக்குமுறை குரலாக இது பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் கோபம் மக்களுக்கானதாக இருந்தது. ரஜினிகாந்த் கோபம், மக்களையே குற்றவாளியாக்குவதாக உள்ளது.
அரசு பலம்
எந்த ஒரு கோபத்திலும் கூட விஜயகாந்த், மக்களை அவமதித்து பேசியது இல்லை. ஆனால் நமக்குப் பின்னால் பெரும் அரச பலம் இருக்கிறது; நாம் என்ன பேசினாலும் யாரும் எதுவும் செய்ய முடியாது; அரச பலத்தின் ஆணித்தரமான குரலாகப் பேசுவோம் என எகத்தாளம் பிடித்தவராக
பேசி வருகிறார் ரஜினிகாந்த் என்பதுதான் வெகுஜன மக்கள் அவரைவிட்டு அன்னியப்பட ஆரம்பித்துள்ளதன் காரணம்.