ஆவினில் ஒரு லிட்டர் பால் ரூ. 25க்கு எப்போ கிடைக்கும்? கேட்கிறார் விஜயகாந்த்
சென்னை: அரசு பால் விலையை, தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஒரு லிட்டர் பால் ரூ.25க்கு இந்த அதிமுக அரசு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா தலைமையிலான அரசு பால்விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒரு அரசாகவே செயல் பட்டுகொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு லிட்டர் பால் ரூ.25க்கு தரப்படும் என்று உறுதியளித்த நிலையில், அதற்கான எந்த ஆக்கப்பூர்வமான செயலிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை.

ஏனெனில் ஆவின் பால் ரூபாய் 24 லிருந்து 37 ரூபாய்க்கு விற்கும் நிலையில், அதேபோல் தனியார் ஹெரிடேஜ் பாலும் ஒரு லிட்டர் ரூ.46க்கு விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் அந்த பால் விலையை மேலும் 2 ரூபாய் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக உள்ளது.
சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பால் அனைத்து குடும்பங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்று, வெற்றி பெற்ற பிறகு அரசு நடந்து கொள்வது வேறு.
கடந்த முறை நடந்த அதே நிகழ்வுகள் இப்பொழுதும் எந்த விதத்திலையும் மாற வில்லை என்பதையே இந்த பால் விலை உயர்வு உணர்த்துகிறது. இதே அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தாலும், காட்சிகள் மாறியதாக தெரியவில்லை. எனவே இந்த அரசு பால் விலையை, தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஒரு லிட்டர் பால் ரூ.25க்கு இந்த அரசு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் ஹெரிடேஜ் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற செய்ய வேண்டும். இந்த அரசை நம்பி வாக்களித்த மக்களுக்கு, வாக்குறுதிகளை காப்பாற்றும் அரசாக செயல்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications