40 ஊர்களில் 200+ இடங்களில் ரெய்டு.. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் குறி வைத்த ஐடி!
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய 200+ இடங்களில் இன்று அதிரடியாக ரெய்டில் இறங்கியுள்ளது வருமான வரித்துறை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை 7 மணி முதல் பரபரவென சோதனை நடத்தி வருகின்றனர்.
எங்கெங்கு ரெய்டு? : தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அரசு 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் ஒருவர் வீட்டில் நடைபெறும் முதல் வருமான வரி சோதனை இதுவாகும். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் தற்போது ஐ.டி ரெய்டு நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
200+ இடங்களில் : மொத்தம் 40 ஊர்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை ஸ்கெட்ச் போட்டு இன்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது.
கரூரில் வேட்டை : கரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரி சோதனை சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின்சாரம் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு அமைந்துள்ளது. இங்கு சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் : கோவையில் 22 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் கார்த்திகேயன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கோவை காளப்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா : தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இப்படியாக 40 ஊர்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications