"கரு"ங்கடலாக மாறிய சென்னை..."பச்சை கொடி" ராஜேந்திர பாலாஜி, "மங்கல" ராஜா எங்கே?
கறுப்பு மங்கலகரமான நிறம் என்று சொன்ன எச். ராஜாவும், கறுப்புக் கொடி காட்டினால் பச்சைக்கொடி காட்டுவோம் என்று சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சென்னையின் தற்போதைய எதிர்ப்புகளுக்கு என்ன சொல்லப் போகிறார
Recommended Video
சென்னை : கறுப்பு மங்கலகரமான நிறம் என்று சொன்ன எச். ராஜாவும், கறுப்புக் கொடி காட்டினால் பச்சைக்கொடி காட்டுவோம் என்று சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சென்னை நகரின் சாலைகளிலும், வானிலும் பட்டொளி வீசும் கறுப்பு எதிர்ப்புகளுக்கு என்ன சொல்லபோகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று அரசியல் கட்சியினர் கேட்டுக்கொண்டனர். வெறும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டமாகத் தான் இது இருக்கும் என்று நினைத்தவர்களை தெறிக்க விட்டு வருகின்றனர் தமிழர்கள். ஏப்ரல் 12ம் தேதியான இன்று காலை பொழுது விடிந்ததா என்பது தெரியாத அளவிற்கு கருமேகம் கறுப்பு நிற கொடி, ஆடை பலூன்களால் நிரம்பி வழிகிறது.
பெண்கள், குழந்தைகள், வயதானோர் என பலரும் தங்கள் மாநிலத்தின் காவிரி உரிமைக்காக வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். வீதிகளில் இறங்கி நடக்கும் போராட்டங்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களும் கறுப்பு நிறத்தால் நிரம்பி வழிகிறது.
கேலி செய்த ராஜா
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி காட்டுவோம் என்று சொன்ன போது அதற்கு கிண்டலத்தார் பாஜக தேசிய செயலாளர் ராஜா. கறுப்பு துக்கத்தின் அடையாளம் என்பது ஆங்கிலேயர்கள் எண்ணம், நம் கலாச்சாரத்தை பொறுத்தவரை கறுப்பு மங்கலகரமான நிறமென்றெல்லாம் சொன்னார். ஆனால் சென்னையில் இன்று நிரம்பி வழிந்த கறுப்பு பிரதமருக்கும், பாஜகவிற்கும் மங்கலகரமானதாக இருந்ததா என்பதை ராஜா மட்டுமே விளக்க வேண்டும்.
ஆதரவு தெரிவித்த ராஜேந்திர பாலாஜி
இதே போன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். கறுப்புக்கொடி காட்டி பிரதமரை உசுப்பேற்றப் பார்க்கிறார்கள். இது நல்ல செயல் கிடையாது. பிரதமரிடம் சண்டை போடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை, கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டி வரவேற்போம் என்றார்.
கறுங்கடலான சென்னை நகரம்
சென்னை முழுவதும் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு, கறுங்கடலாக காட்சியளிக்கும் நகரத்தை பார்த்து இவர்கள் இரண்டு பேரும் இதுவரை எந்த கருத்தையும் சொல்லவில்லையே. கறுப்புக்கொடி காட்டுவதற்கு எதிராக பச்சைக்கொடி காட்டுவோம் என்று சொன்ன அமைச்சர் பிரதமரின் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவில் அமைதியாக இருந்தார்.
ஒற்றுமை ஓங்கட்டும்
அரசியல் கட்சிகள் சொல்வது போல இது வெறும் சாதாரண போராட்டம் என்று நினைத்த அரசுக்கும், பாஜகவையும் வியக்க வைத்துள்ளது தமிழர்களின் ஒற்றுமை. இந்த ஒற்றுமை கடைசி வரை இருந்தால் மத்திய அரசுக்கு எப்போதும் ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டி நிச்சயம் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க முடியும்.