கொழுக்குமலையின் மறுபக்கம்... அதிரவைக்கும் 'அதிபன் போஸ்' (எ) நந்தி சாமியார் எஸ்டேட்!
Recommended Video
தேனி: மேஜிக்கல் சன்ரைஸ், காலை உணவு, டீ தொழிற்சாலை விசிட் ஆகியவற்றோடு 250 கிராம் டீத்தூள் இலவசம்' - இந்த பேக்கேஸ் வேணுமா? இல்லை...பிரேக் ஃபாஸ்ட், லஞ்ச், பேக்டரி விசிட், கேம்பிங், 250 கிராம் ஆர்த்தடாக்ஸ் டீத்தூள் ஆகியவை கலந்த பேக்கேஜ் வேணுமா?' என சுண்டியிழுக்கும் விளம்பரத்தோடு இழுக்கிறது கொழுக்குமலை எஸ்டேட்.
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் அமைந்துள்ள கொழுக்கு மலை எஸ்டேட்டின் பின்னணி சாதாரணப்பட்டதல்ல. மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கான ஒரே தங்கும் புகலிடம் கொழுக்குமலை மட்டுமே. குரங்கணியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த எஸ்டேட்.
1900-ம் ஆண்டுகளில் இருந்து இயங்கி வரும் இந்த டீ எஸ்டேட்டுக்கான சிறப்பு என்னவென்றால், பூச்சிக் கொல்லி மருந்தில்லாத, ரசாயனக் கலப்பு இல்லாத டீத்தூளைத் தயாரிப்பதுதான். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது, தேனி அய்யன் ஜமீனுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அன்றில் இருந்து இன்று வரையில், தங்களது விளம்பரத்தில் கீழ்கண்ட வாசகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
சுத்தமான டீத்தூள்
' 30 சதவீத தேயிலைச் செடிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருக்கின்றன. குறைவான தேயிலையை அளிக்கும் சைனா வகைகளும் நிறைந்த தரத்துடன் கூடிய டீத்தூள்களும் தயாராகின்றன. உலகின் சுத்தமான டீத்தூள் இதுதான்' என விளம்பரப்படுத்துகின்றனர். அய்ய நாடாரின் வாரிசுகளால் இந்த எஸ்டேட் வழிநடத்தப்படுகிறது. தற்போது இந்த எஸ்டேட்டிலேயே தங்கியிருந்து கவனித்து வருகிறார் தபசுயோகி நந்தி சாமியார் என்கிற அதிபன் போஸ். கலிபோர்னியாவின் மருமகனாக மாறி, நல்ல குடும்பத் தலைவராக இருந்து வந்த அதிபன் போஸ், நந்தி சாமியாராக மாறி எட்டு ஆண்டுகளாகிவிட்டன. கொழுக்கு மலை எஸ்டேட்டுக்கு ட்ரெக்கிங் செல்லும் சூழல் ஆர்வலர்கள், நந்தி சாமியாரிடமும் பல மணிநேரம் விவாதிக்கின்றனர். எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் அனைவரிடமும் எளிமையாகப் பழகுகிறார் அதிபன். குரங்கணிக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, கொழுக்கு மலை எஸ்டேட்.
நடைபயணம்
இதுகுறித்து நம்மிடம் பேசும் சூழல் ஆர்வலர்கள், ' குரங்கணி தீ விபத்த நடந்ததால்தான், வனத்துறையில் நிலவும் பல குளறுபடிகள் வெளி உலகின் கவனத்துக்கு வந்துள்ளன. தேனி மாவட்டத்தில் இருந்து சரியாக 57 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொழுக்கு மலை எஸ்டேட். இதைத்ததவிர, வேறு எந்த தங்கும் வசதிகளும் அங்கு இல்லை. குரங்கணியிலிருந்து கொழுக்குமலை சென்று தங்கிவிட்டு, திரும்பி வரும் வழியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தின்போது, சுற்றிலும் அடர்ந்த மரங்கள் கிடையாது. நான்கு அடி வரையில் வளரக் கூடிய புற்கள் மட்டுமே உள்ளன. எனவே, உயிரிழப்பு ஏற்படாது என்ற எண்ணத்தில் கிளம்பியவர்களுக்கு, தீ விபத்து கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. குடிதண்ணீர் இல்லாமல், நடக்கவும் முடியாமல் பதற்றத்தில் விழுந்தவர்கள்தான் அதிகம் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்கள், " கேரள வனப்பகுதிகளைப் போல, சாரலும் மேகமும் தவழும் வனப்பகுதி அது. மிகவும் கடினமான மலைப்பகுதி. முதுவார் பழங்குடிகள் வசிக்கும் முதுவாக்குடி வரையில் மட்டுமே ஜீப்பில் பயணிக்க முடியும். அதன்பிறகு, கால்கள் மட்டுமே ஒரு துணை.
தூக்கிக் கொண்டுதான் வர வேண்டும்
டிரெக்கிங் செல்பவர்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தூக்கிக் கொண்டுதான் வர வேண்டும். அங்குள்ள புற்களில் தீப்பிடித்தால், வெகுவேகமாகப் பரவும் தன்மையுடையது. பழங்குடிகளின் துணை இல்லாமல் செல்வது மிகவும் ஆபத்தானது. வன அதிகாரிகளே உள்ளூர் மக்களின் துணையோடுதான் செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அங்குள்ள புற்கள் காயத் தொடங்கிவிடும். அதன்பிறகு, அங்குள்ள இலையுதிர் காடுகளின் இலைகளும் காய்ந்து விழத் தொடங்கும். இந்தநேரத்தில், தீ தடுப்பு பணியாளர்களை நியமித்து, காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தும் பணியை வனத்துறை மேற்கொள்ளும். பல ஆண்டுகளாக இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. சருகுகளை அப்புறப்படுத்தாததால், தீ வேகமாகப் பரவிட்டது. தேனி போன்ற காப்புக் காடுகளுக்கு நிதி உதவியைக் கேட்டு பலமுறை மனு அனுப்பியும் அரசு கண்டுகொள்ளவில்லை" என்றவர்கள்.
ஒரே எஸ்டேட்
வனத்துறையின் எல்லைகளில் ஏகப்பட்ட ரிசார்ட்டுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், வனத்தில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற கவலையும் இவர்களுக்கு இல்லை. குரங்கணியில் இருக்கும் ஒரே எஸ்டேட் என்பதால், ஒவ்வொரு பேக்கேஜூக்கும் தனித்தனி கட்டணங்களை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். வனாந்திரப் பகுதியில் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்கு உகந்த சூழல் இருப்பதால், இந்த எஸ்டேட்டைப் பலரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். குரங்கணி மலைப்பகுதிக்குச் செல்ல, எஸ்டேட் ஊழியர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது வனத்துறை. இந்த அனுமதியை ட்ரெக்கிங் செல்பவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்படித்தான் குழந்தைகளையும் ட்ரெக்கிங் செல்வதற்கு அழைத்து வந்துள்ளனர். இதனையெல்லாம் கண்காணிக்கக்கூடிய வனத்துறையில் ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. கொழுக்கு மலை எஸ்டேட் கொடுக்கும் தைரியத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை. இதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை பலி கொடுக்க வேண்டி வந்தது. எஸ்டேட்டுகளில் முழுமையான கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும்" என்கின்றனர் குமுறலுடன்.
அதிபன் போஸ் யார்?
"பிள்ளைப் பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தின் நாட்டம் உடையனாக இருந்தேன். திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. என் ஆன்மா என்னைவிட்டு வெளியேறியதை உணர்ந்தேன். இறப்புக்கு சமமான அந்த சம்பவத்தால், இந்த உலகைவிட்டே வேறு உலகில் புகுந்துவிட்டதாகக் கருதினேன். என்னுடைய ஆன்மிக வாழ்க்கை தொடங்கியது இந்தப் புள்ளியில்தான். என்னுடைய ஆசிரமத்தின் மூலம் ஒரு லட்சம் சீடர்கள், ஆன்மிகத்தைப் பரப்பி வருகிறார்கள் - இதான் அதிபன் போஸ் என்கிற நந்தி சாமியார் சொன்ன டயலாக்.