ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை - ஸ்டாலின் பொளேர் பேச்சு!
ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் பரவி வரும் நிலையில் ஸ்டாலினின் பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கட்சியை கைப்பற்றியுள்ள சசிகலா, அடுத்து முதல்வராக பதவியேற்று ஆட்சியையும் கைப்பற்றப்போவதாக தகவல் பரவி வருகிறது.
இதற்காக கட்சிக்குள் உள்ள அவரது ஆதரவு நிர்வாகிகளை தூண்டிவிட்டு சின்னம்மா புகழ்பாடச் செய்து வருகிறார். செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் சசிகலாதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் அவரே முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றும் தொடக்கம் முதலே கொடி பிடித்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் பரபரப்பு
மேலும் சசிகலா இந்த மாதத்திலேயே முதல்வராக பதவியேற்க நாள் குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்பார் என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஜெ.வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக முடியாது
இதனிடையே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தங்கி உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை.
ஜனநாயக விதிகளுக்குட்பட்டே..
தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக எந்தவொரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே எடுக்கும்". இவ்வாறு ஸ்டாலின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் பரபரப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது. சசிகலா முதல்வராக அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.